Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சேரமான் காதலி- Cheraman Kaadhali -Seramaan Kadhali

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
KP B 036
Regular Price ₹500.00 Special Price ₹480.00

Save: 20.00 Discount: 4.00%

வரலாற்று புதினம். 

கெட்டியான அட்டை (ஹார்ட்கவர்); 
680 பக்கங்கள்; 
முதற் பதிப்பு: மே 1977; 
கண்ணதாசன் பதிப்பக முதற் பதிப்பு: நவம்பர், 2010; 
பதினொன்றாம் பதிப்பு: பிப்ரவரி, 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சேரமான் காதலி- என்ற புதினம் 1980ல் கண்ணதாசனுக்கு சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. அதாவது கி.பி. 798இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் 834இல் தான் மெக்காவுக்குப் போகிறார். அவரது 36 ஆண்டு ஆட்சியை நான் கதைப் போக்குக்காகச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர, அனைத்தும் கலை நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவையே. 
 
சேரமான் பெருமாள் வரலாற்றிலும் மதக் கருத்துக்களைச் சொல்வதற்கு நிறைய இடம் இருந்தது. காரணம், இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் ஆனது, வைணவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. அவரது திருமகன் வேணாட்டடிகள் என்ற பட்டப் பெயரோடு சைவப் பெரியாராக வாழ்ந்தது சைவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் மதம் மாறி மகமதியரான குறிப்பும் இருந்தது. -கண்ணதாசன். 
 
கவிஞரின் கதைகளிலே சொக்கிப்போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வங் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மைக் கண்கலங்க வைத்திருக்கின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும் சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருக்கின்றன. இவை அத்தனையும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்... அது 'சேரமான் காதலி" நாவல் என்றுதான் சொல்லவேண்டும். 
 
கவிஞர் கண்ணதாசன் தனது வாழ்நாளில் 4000 கவிதைகளையும் சுமார் 5000 சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். 21 நாவல்கள் உட்பட 109 நூல்களை இவர் எழுதியுள்ளார். இதில் மிகச் சிறப்பானதாகச் கருதப்படும் 'சேரமான் காதலி' சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 
முன்னுரை: 
மூன்றாம் சேரமான் பெருமாள் (கி.பி 798 - கி.பி 838)
 
இவ்வரசன் பட்டத்துக்கு வந்தது.       கி.பி 798
 
பட்டத்தை வெறுத்து விட்டு விட்டது - சேர நாட்டை 12 பகுதிகளாகப் பிரித்ததும் மெக்காவுக்குச் சென்றதும்.
 
மெக்கா சென்று மகமதிய மதத்தில் சேர்ந்து, பின் ஜபார் (Jaffar) என்னும் இடம் சென்று வாழ்ந்து இறந்தது. - 838.
 
இரண்டாம் சேரமான் பெருமாள் கி.பி.798 இல் தன்னுடைய மகனுக்கு அரசைக் கொடுத்துவிட்டுத் தவக்கோலம் பூண்டு, பாகவதர் கூட்டத்துடன் திருமால் திருப்பதிகளைச் சேவிக்கச் சென்றவுடன், அவன் மகன் மார்த்தாண்டன் ஆட்சிக்கு வந்தான். ஆனால், தாயாதிகளுக்குள் கலகம் ஏற்பட்டு, நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டன. அப்போது சேரநாட்டில் யூதர்களும் (Jews), சிரியன் கிறிஸ்தவர்களும் (Syrian Christians), மகமதியர்களும் நிறைந்து இருந்தார்கள். வாணிப நிமித்தம் வந்த இவர்கள் சேரநாட்டில் பல இடங்களைக் கைப்பற்றித் தற்காப்புக்கென்று படைகளும் வைத்திருந்தார்கள்.
 
இரண்டாம் சேரமான் பெருமாளுக்குத் தாயாதியான மூன்றாம் சேரமான் பெருமாள், தன் நாட்டில் இருந்த பௌத்தர், யூதர், கிறிஸ்துவர், மகமதியர் என்பவர்களுடைய நட்பைப்  பெற்று அவர்களைத் தனக்குத் துணை புரியும்படியும், அப்படித் தனக்குத் துணை புரிந்தால் அரசாங்கத்தைத் தான் கைப்பற்றியதும் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்வதாகவும் வாக்களித்து, அவர்களுடைய துணை கொண்டு சேரநாட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான். மூன்றாம் சேரமான் பெருமாளுக்கு இயற்பெயர் பாஸ்கர இரவிவர்மன் என்பது. அவனுடைய முடிசூடிய பெயர்தான் மூன்றாம் சேரமான் பெருமாள் என்பது.
 
வேள்விக்குடி - சீவரமங்கலம் செப்பேடுகளில், நெடுஞ்சடையன் என்கிற முதலாம் பராந்தக பாண்டியன் (கி.பி.765-790), பல்லவர்களைப் பெண்ணாகடம் என்னும் இடத்தில தோற்கடித்து, பல்லவ நாட்டின் தென் பகுதியைக் கைப்பற்றினான் என்றும், வேணாட்டில் (திருவாங்கூர்) ஆட்சி செலுத்தி வந்த வேள் ஆய் என்பவனை விழிஞம் என்னும் இடத்தில் முறியடித்து, வேணாட்டைப் பாண்டிய நாட்டோடு இணைத்துக் கொண்டான் என்றும் காண்கிறோம்.
 
மேலே கூறப்பட்ட பாண்டியன் நெடுஞ்சடையன் கி.பி.790 இல் இறந்ததும், இரண்டாம் சேரமான் பெருமாள் என்கிற குலசேகர ஆழ்வார் நெடுஞ்சடையன் மகன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியனோடு சண்டை செய்து, அவனைத் தோற்கடித்து, வேணாட்டைச் சேர நாட்டோடு சேர்த்துக் கொண்டார் என்று அவருடைய சரித்திரத்தில் படித்தோம். ஆதலின், மூன்றாம் சேரமான் பெருமாள் கி.பி.798 இல் பட்டத்துக்கு வந்தபோது, வேணாடு சேர நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பது தெரிகிறது.
 
இரண்டாம் சேரமான் பெருமாளுடைய மகனைப் பகைத்துக்கொள்ள மனம் இல்லாமல், உள்நாட்டுக் கலகம் ஏற்படாமல் இருக்கும்பொருட்டு, அவனுக்கு வேணாட்டைக் கொடுத்துத் தனக்குக் கீழ் ஆளும்படிச் செய்தார் மூன்றாம் சேரமான் பெருமாள். இஃது அரசியல் சூழ்ச்சிகளில் ஒன்று. கடைசியாக, கி.பி.834 இல் மூன்றாம் சேரமான் பெருமாள் சேரநாட்டைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்த போது, வேணாட்டோடு ஒட்ட நாட்டையும் சேர்த்து மார்த்தாண்டவர்மனுக்குக் கொடுத்தார். அது முதல் சென்ற ஆண்டுவரை திருவாங்கூர் (வேணாடும் ஒட்டநாடும் சேர்ந்தது) அரசு கட்டிலில் வீற்றிருந்தவர் இவர் பரம்பரையினரே ஆவர்.
 
கி.பி.834 இல் வேணாடு தனியாகப் பிரிக்கப்பட்டு, தனி ஆட்சி ஏற்பட்டதும் அரசருக்கு வேணாட்டு அடிகள் என்ற பட்டம் ஏற்பட்டது. 
 
இரண்டாம் சேரமான் பெருமாள் திருமால் அடியாராக இருந்தாலும், அவர் மகன் மார்த்தாண்டவர்மன் சேர நாட்டு மரபுப்படி சைவனாகவே வாழ்ந்து வந்தான். ஆனால், சைவனாக இருந்தாலும் திருமால் அடியார்களையும், திருமால் திருப்பதிகளையும் பாதுகாத்து வந்தான். அதனால் அவன் எல்லாச் சமயத்திடத்தும் பொது நோக்கமுடையவனாக இருந்தான் என்று தெரிகிறது. திருவிதாங்கோட்டில் (திருவாங்கூர்) உள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்கும் வேண்டிய நிவந்தங்களைச் செய்துள்ளான். தந்தையைப் போலவே இவனும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான்.
 
வேணாட்டுக்கு இவன் முதல் அரசன் ஆனதால் எல்லோரும் இவனை வேணாட்டடிகள் என்றே கூறி வந்தார்கள். அவருடைய இயற்பெயர் வழங்கப்படவில்லை. திருவாங்கூர் அரசர்களுக்கு இன்றும் வேணாட்டடிகள் என்ற பட்டம் இருப்பதானது இவ் வரலாற்றை வலியுறுத்தும். இவ்வேணாட்டடிகள்  கடைசியில் அரசைத் தன் மகனுக்குக் கொடுத்துவிட்டுத் தில்லை சென்று அங்கே தங்கி, தில்லைக் கூத்தப் பெருமான் பேரில் 'திருவிசைப்பா' பாடி, அங்கேயே முத்தி எய்தினார் என்பது அவருடைய திருவிசைப் பாக்களை ஆராய்ந்தால் இனிது விளங்கும்.
 
வேணாட்டடிகளுடைய திருவிசைப்பாப் பாடல்கள் மதுராந்தகம் உத்தமச் சோழ அரசர் (கி.பி.970-984) காலத்திலேயே ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆதலால், இவருடைய காலம் உத்தமச் சோழர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவாக விளங்குகிறது.
 
மூன்றாம் சேரமான் பெருமாள் கி.பி.798 இல் பட்டத்துக்கு வந்ததும், தனக்குத் துணைபுரிந்த பௌத்தர் யூதர்-கிரிஸ்தவர்-மகமதியர் முதலியோருக்கு வேண்டுவன செய்தார். அத்துடன் உள்நாட்டுக் கலகம் ஏற்படாதபடி பார்ப்பனர்களும், நம்பூதிரிகளும், ஏனைய செல்வர்களும் மனம் கோணாமல் நடந்து வந்தார். இவர் 36 ஆண்டுகள் ஆட்சி செய்ததில் மகமதியர்களுடன் அதிகமாய்ப் பழகி வந்தார்.
 
மூன்றாம் சேரமான் பெருமாளுடைய பட்டத்து அரசி செரோட்டி அம்மாள். சேரர் வீட்டு அம்மாள் என்பது மருவி பேச்சு வழக்கில் செரோட்டி அம்மாள் என்று ஆயிற்று. இவருக்குக் குழந்தைகள் கிடையா. இவருடன் கூடப்பிறந்தவர்கள் பெண்கள் ஐவரும் தம்பி ஒருவரும் ஆவர். ஐந்து பெண்களின் பெயர்கள் வருமாறு:- 1.மூத்த தாவளி, 2.இளைய தாவளி, 3.மூரின்னூர்த் தாவளி, 4.சாலியூர்த் தாவளி, 5.பள்ளிவிருத்தித் தாவளி. தம்பியின் பெயர் தெரியவில்லை. 
 
மூன்றாம் சேரமான் பெருமாள் மகமதியர்களுடன், அஃதாவது மாப்பிள்ளைமார்களுடன் மிகப் பழக்கமாய் இருந்தபடியால், வினைக்கு ஈடாக, அவருக்கு மாப்பிள்ளைகளைச் சேர்ந்த ஒரு மகமதியப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.  இது பல நாள் இரகசியமாக இருந்து பிறகு எப்படியோ வெளிப்பட்டுவிட்டது. அது முதல் மக்களுக்கு, சிறப்பாக நம்பூதிரிகளுக்கும் ஏனைய செல்வர்களுக்கும், மன்னனிடத்தில் கசப்பு ஏற்பட்டு விட்டது. 
 
அதனால் பாண்டிய நாட்டு அரசனைச் சேரநாட்டின் மீது படையெடுக்கும்படித் தூண்டினார்கள்.
 
கி.பி.830 இல் மூன்றாம் வரகுண பாண்டியன் இறந்தவுடன் சீமாறன் பரச்சக்கர கோலாகலன் என்னும் ஏகவீரன் என்கிற ஸ்ரீவல்லபன் பட்டத்துக்கு வந்தான். இவன் சேர அரசன் மூன்றாம் சேரமான் பெருமாளோடு போர் தொடுத்து, விழிஞம் என்னும் இடத்தில் நடந்த போரில் சேரனைத் தோற்கடித்தான். விழிஞம் என்பது திருவாங்கூருக்குத் தெற்கே பத்துக்கல் தொலைவில் இருந்த ஒரு கடற்றுறைப்பட்டினம். சேரர்களுடைய கப்பற்படைகள் தங்கும்  துறைமுகம் ஆகும். தன் சொந்த நாட்டு மக்களும் வேறுபட்டு விட்டார்கள்; விழிஞத்திலும்  பாண்டியன் தன்னைத் தோற்கடித்ததோடு நில்லாமல் வஞ்சி நகர் மீது படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டுத் தன்னுடைய நாட்டைப் பன்னிரண்டு சிறு நாடுகளாகப் பிரித்து, வேணாடு - ஒட்ட நாடுகளை மார்த்தாண்டவர்மனுக்கும் அவனுடைய சந்ததியாருக்கும், கோழிக்கோடு என்னும் ஏறநாட்டைத் தன் தம்பி மக்களுக்கும், குட்ட நாட்டை (Cochin) தன் சகோதரிகள் ஐவருக்கும், ஏனைய ஒன்பது பகுதிகளைத் தன்னுடைய சுற்றத்தார், நண்பர்கள், வேலைக்காரர்கள் முதலியோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, அரேபியாவுக்குச் செல்லும் ஒரு கப்பலில் இரவுக்கிரவாகத் தன்னுடைய வைப்பாட்டியுடன் அரபிக்கரையில் உள்ள "சகர்முக்கல்"  என்னும் துறைமுகப்பட்டினத்திற்குச் சென்று இறங்கினார்.
 
அங்கிருந்து புறப்பட்டு மெக்காவை அடைந்து அங்கே மகமதிய மதத்தைத் தழுவி, அப்துல் ரஹீமான் சாமொரின் என்று பெயர் மாற்றிக் கொண்டு, சில நாள் அங்கிருந்து பிறகு அவ்விடம் விட்டுக் கடற்கரை வழியாகவே சென்று ஜாபர் (Jaffar), என்னும் ஊரை அடைந்து வாழ்ந்தார். அப்பால் உடல் தளர்ந்தது. மகமதியப் பெண்ணின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இவர் சேர நாட்டைப் பன்னிரண்டு பாகங்களாக வகுத்த செய்தியைக் கேமியான்ஸ் என்பவர், அவர் எழுதிய ஊலூசியாட் என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
 
இவர் ஜபார் என்னும் அந்த ஊரிலேயே கி.பி.838 இல் இறந்துவிட்டார். அவருக்கு அந்த ஊரில் சமாதி ஒன்று கட்டி அவர் உடலை அடக்கம் செய்தார்கள். அந்தச் சமாதியில் "சேர அரசன் அப்துல் ரஹீமான் சாமொரின் அடக்கம். அவர் A.H.212 இல் வந்து A.H.216 இல்  இறந்தார்" என்று அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது என்று மிஸ்டர் உலோகன் கூறுகிறார். 
 
A.H. என்பது After Hijra என்பதன் முதல் எழுத்துக்கள். மகமதிய சகம் ஆரம்பம் கி.பி.622 இல் ஆகும். ஆதலின் மேற்படி ஆண்டுகளுடன் 622ஐக் கூட்ட கி.பி. 834-838 ஆவதைப் பார்த்தால் தெளிவாக விளங்குகிறது. 
 
துடிசைக்கிழார் எழுதிய சேரர் வரலாற்றில் பக்கம் 121-இல் இருந்து 126 வரை காணப்படும் மூன்றாம் சேரமான் பெருமாள் வரலாறு இது.
 
அவர் எழுதியுள்ளதை அப்படியே மேலே தந்திருக்கிறேன்.
 
இரண்டாம் சேரமான் பெருமாள் என்ற குலசேகர ஆழ்வாரின் வரலாறும் சேரர் வரலாற்றில் காணப்படுகிறது. இடமின்மை காரணமாக அது இங்கே பிரசுரிக்கப்பட வில்லை. ஆனால் அதில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டுதான் இந்தக் கதையை நான் எழுதினேன்.
 
1962-ஆம் ஆண்டில் ஒரு சரித்திரக் கதையைத் திரைப்படமாக்க வேண்டும் என்று நான் எண்ணியபோது மேலே கண்ட வரலாற்றுக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. அப்பொழுதே இந்தக் கதையை ஒரு திரைக்கதையாக வடித்தேன். ஆனால் அந்தக் கதையில் என்னென்ன நிகழ்ச்சிகளைச் சேர்த்திருந்தேன் என்பது மறந்துபோய் விட்டது. திடீரென்று 'கல்கி' ஆசிரியர் திரு.கி.ராஜேந்திரன் அவர்களும், துணை ஆசிரியர் திரு.ரா.வீழிநாதன், திரு.மணி, திரு.ஸோமாஸ் அவர்களும் என்னிடம் வந்து, கல்கியில் நான் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதவேண்டும் என்று கேட்டார்கள்.
 
தமிழில் சரித்திரக் கதை எழுதுவதில் தன்னிகரற்று விளங்கிய பேராசிரியர் கல்கி அவர்களின் பத்திரிகையில் என்னையும் எழுதும்படி கேட்டுக்கொண்டது, உண்மையிலே எனக்கு பெருமையாக இருந்தது. நானும் ஒப்புக்கொண்டேன்.
 
உடனடியாக என் நினைவுக்கு வந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் படித்த மூன்றாம் சேரமான் பெருமாளின் வரலாறுதான்.
 
அண்மைக் காலங்களில் நான் எந்தக் கதையை எழுதுவதென்றாலும் மதக் கருத்துக்களோ, சமுதாயக் கருத்துக்களோ இடம்பெறக்கூடிய கருவைத்தான் எடுத்துக் கொள்வது வழக்கம்.
 
சேரமான் பெருமாள் வரலாற்றிலும் மதக் கருத்துக்களைச் சொல்வதற்கு நிறைய இடம் இருந்தது. காரணம், இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் ஆனது வைணவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. அவரது திருமகன் "வேணாட்டடிகள்" என்ற பட்டப் பெயரோடு சைவப் பெரியாராக வாழ்ந்தது, சைவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் மதம் மாறி மகமதியரான குறிப்பும் இருந்தது.
 
ஆகவே எல்லாக் கருத்துக்களுக்கும் இடமளிக்கும் கதை என்பதால், வந்திருந்த கல்கி நண்பர்களிடம், 'சேரமான் காதலி" என்ற தலைப்பை உடனடியாகவே கொடுத்து விட்டேன்.
 
இந்தக் கதையை நியாயமாக மூன்றாம் சேரமான் பெருமாளில் இருந்தே துவங்கியிருக்கவேண்டும். அப்படித் துவங்கி இருந்தால், கற்பனைகளை ஏராளமாகக் கலந்திருக்கலாம். ஆனால் சமயக் கருத்துக்காகவே இரண்டாம் சேரமான் பெருமாளில் இருந்து துவங்கினேன்.
 
சரித்திரத்தின் போக்கிலேயே கற்பனை கலந்தேனே அல்லாது, தடம் தவறிப்போகவில்லை.
 
இதில் என்னுடைய சொந்த சிருஷ்டி, யூதப் பெண் யூஜியானா.
 
கள்ளியங்காட்டுக் கிருஷ்ணன் கோயில் நிகழ்ச்சி பதினேழாம் நூற்றாண்டு மார்த்தாண்டவர்மன் பற்றியது, என்று சிலர் கூறுகிறார்கள். எனினும் இந்தக் கதைக்கு அதுவும் பொருத்தமானது என்பதால் சேர்த்துக் கொண்டேன். 
 
நம்பூதிரிகள் சபைத் தலைவர் வரலாற்றில் வருகிறார்; அவரது பெயர் மட்டும்தான் நான் கொடுத்தது. மகமதியப் பெண்ணுக்கும் பெயர் மட்டும்தான் நான் சூட்டினேன்.
 
கதைச்சுவைக்கான சம்பவங்களைத் தவிர, மற்றவை வரலாற்று உண்மைகளே.
 
வெறும் வரலாற்றைச் சொன்னாலும் தலையை வலிக்கும். வெறும் கற்பனையில் பிண்டம் பிடித்தாலும் அடிப்படை இல்லாத மாளிகை போலிருக்கும். இரண்டும் கலப்பதற்குப் பெயர்தான் சரித்திரக் கற்பனை.
 
இந்த வரலாற்றில் ஒரே ஒரு விஷயத்தில்தான் வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படும்.
 
அதாவது கி.பி.798இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் 834இல் தான் மெக்காவுக்குப் போகிறார். அவரது 36 ஆண்டு ஆட்சியை நான் கதைப்போக்குக்காகச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர, அனைத்தும் கலை நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவையே.
 
இந்தக் கதையை நான் எழுதத் தொடங்கும்போது ஏராளமான முஸ்லிம் நண்பர்களிடம் இருந்து கடிதங்கள் வந்தன.
 
'சேரமான் பெருமாள், நபிகள் நாயகத்தின் மரியாதையைப் பெற்ற சமகாலத்தவர்,' என்று சிலரும் 'அவரை ஒட்டிய காலத்தில் வாழ்ந்தவர்' என்று சிலரும் எழுதியிருந்தார்கள்.
 
ஒரு வரலாற்றில், 'நபிகள் நாயகம் மறைந்து 82 ஆண்டுகளுக்குப் பிறகு சேரமான், மதம் மாறி மெக்காவுக்குப் போனார்' என்று காணப்படுகிறது.
 
ஒரு கடிதத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி - முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் - 'முஸ்லிம்களின் மனது புண்படாதவாறு கவிஞர் எழுதுவாராக' என்று குறிப்பிட்டிருந்தார். 
 
நான் ஒரு தீவிர இந்து என்றாலும், மற்ற இந்துக்களைப் போலவே பிற மதத்தவரைப் புண்படுத்தத் தெரியாதவன்.  இந்தக் கதைப் போக்கில் அதனைக் காணலாம்.
 
சேரமான் ஆட்சிக் காலத்தில் திருவஞ்சைக்களத்தில் மகமதியர்கள் இருந்தார்களே தவிரமசூதிகள் கட்டப்படவில்லை என்றும் ஒரு முஸ்லிம் நண்பர் சுட்டிக் காட்டியிருந்தார், உண்மைதான்.
 
கதையின் ஆரம்பத்தில் மசூதி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பது தவறுதான்.
 
சேரமான் பெருமாள் மெக்காவுக்குப் போன பிற்பாடு அங்கிருந்து ஒரு தூதுவனை அனுப்பினார். அந்தத் தூதுவன் கண்ணணூரில் இருந்து கொடுங்களூர் வரையில் பயணம் செய்து, முதல் மசூதியைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
 
ஆக, மிக எச்சரிக்கையோடும் சுவையோடும் இந்தக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறேன்.
 
கல்கி நண்பர்களின் தூண்டுதல் இல்லை என்றால், இவ்வளவு பக்கங்கள் கொண்ட நூலை நான் எழுதியிருக்க முடியாது. ஆகவே, முதலில் அவர்களுக்கு என் நன்றி.
 
கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் ஒவ்வொரு வாரமும் நான் சொல்லச் சொல்ல இதை எழுதிய என் தம்பி இராம.கண்ணப்பனுக்கும், வழக்கமாக என் நூல்களை அழகாக வெளியிடும் வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்களுக்கும் என் நன்றி.
 
'AL S' 
சென்னை 
13-5-77
 
அன்பன், 
கண்ணதாசன். 

ஆசிரியர் குறித்து: கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

More Information
SKU Code KP B 036
Weight in Kg 0.150000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184026184
Author Name கவிஞர் கண்ணதாசன் Kavignar Kannadhasan
Publisher Name கண்ணதாசன் பதிப்பகம் Kannadasan Pathippagam
Write Your Own Review
You're reviewing:சேரமான் காதலி- Cheraman Kaadhali -Seramaan Kadhali

Similar Category Products