Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

செல்லும் சொல்வல்லான் - இலங்கை ஜெயராஜ் - Sellum Solvallaan - Ilangai Jeyaraj - Sellum Solvallan

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 196
₹80.00

இலக்கிய திறனாய்வு நூல். 

காகித உறை/ பேப்பர்பேக்; 

208 பக்கங்கள்;

முதற் பதிப்பு: மே, 2013;  

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் செல்லும் சொல்வல்லான், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
புதுவைக் கம்பன் விழாவில் 10.05.20013 அன்று வெளியிடப்பெற்றது.
 
என்னுரை: 
உயர் கம்பன் திருவடிகளில், 
நான் புதிதாய்ச் சமைத்த மாலை ஒன்றை, 
அன்புத்தகுதி கொண்டு சூட்டி மகிழ்வு கொள்கிறேன்.
ஏலவே நான் சூட்டிய மூன்று மாலைகள், 
அத்தெய்வப் புலவன் திருவடிகளை.
அணி செய்து என நான் உரைப்பது சரிதானா?
கற்பகப் பூக்களால் சான்றோர் சாற்றிய மாலைகள் பல, 
கம்பன் திருவடிகளில் கமழ்ந்து கிடப்பதால், 
கற்றோர்க்கு இவை காகிதப்பூமாலைகளாய்த் தோன்றிடலாம்.
ஆனாலும், சூட்டிய எந்தனுக்கு, 
அவை அழகு மாலைகளாய்த்தான் தோன்றுகின்றன.
அவ் எண்ணத்தின் காரணம், 
அன்போ, அறியாமையோ அறியேன்.
ஒழுங்கற்ற மண்வீடானாலும், 
விளையாட்டாய்க் கட்டிய குழந்தைக்கு அது மாளிகைதான்.
அதன் மனநிலையே என் மனநிலையும்.
கற்றோரே அறிவுத்தகுதி காண விழைவர்.
கடவுளுக்கு அன்பே தகுதியாம். 
என்னை வாழ்வித்த கம்பக்கடவுள்தன் திருவடிகளில், 
அன்புத்தகுதியால் இந்த அணிமலரைச் சூட்டுகிறேன், 
அவன் ஏற்பான் எனும் நம்பிக்கையில்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-* 
 
ஒரு நூலுள் பல நூல்களைச் சமைத்த வன்மை, 
கம்பனின் மதி நுண்மை 
ஏட்டில் எழுத முடியாத இறைவனையே, 
கூட்டிக் குறிகளுக்குள் கொடு வந்த கைத்திறமா?
நீட்டி உரைக்காமல் நிழல் போல, கதையுள்ளே, 
மாட்டியிருக்கின்ற மாண்பான தத்துவமா ?
வீட்டில் நடக்கின்ற வினையெல்லாம் கூட அவன், 
பாட்டில் பதித்திட்ட பக்குவமா? 
காடு, மலை, வானம், கடல், ஆறு அத்தனையும், 
நாடி அவன் உரைத்த நயப்பதனின் மகத்துவமா ?
பேதமற மனிதனொடு விலங்கு, பறவையெலாம், 
ஆதரவு செய்கின்ற அரும்பெரிய அற்புதமா ?
கம்பன் பெருமைக்குக் காரணம் இவற்றுள்ளே, 
ஏதென்று உரைக்க என்னால் முடியவில்லை.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்,
எங்கள் கம்பா ! கம்பா ! கம்பா !
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
கைபிடித்துக் கம்பனுள் அழைத்துச்சென்ற, 
கற்றாரைக் காலம் விழுங்கிவிட, 
உள்நுழைந்த பாதை மூடப்பட்டதால், 
ஆழவும் முடியாமல், மீளவும் முடியாமல், 
அன்றாடம் அவதியுறுகிறேன். 
மூழ்கியதோ அமுதக் கடல், 
நிகழ்வது திணறலா? தித்திப்பா ? 
இன்று என் நிலை எதுவென்று எனக்கே தெரியவில்லை. 
கம்பனின் அறிவாழம் கண்டு புத்தி திணறுகிறது. 
அவனது அமுதக்கவிச்சுவையால் இதயம் தித்திக்கிறது. 
அச்சமும், ஆனந்தமும் ஒருங்கே நிகழும், 
இவ் அற்புதத்தை என் சொல்ல ? 
முழுமையாய்க் கம்பனை, 
தொடவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை.
கவிச்சுவை காட்டி, 
'இதோ பிடி' என்று தொடவும் வைக்கிறான். 
ஆழம் காட்டி அஞ்சி விடவும் வைக்கிறான்.
காவியத்தைக் கற்கக் கற்க, 
கடவுளோடு கம்பன் ஒன்றுவது புலனாகிறது. 
கம்பனைத் தொட்டார் கடவுளைத் தொட்டாரே !
என் முன்னோர் செய்த நல்வினைப்பயன், 
இப்பிறப்பில் கம்பனின் அடிதொடும் வாய்ப்புற்றேன். 
ஈங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ?
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
கம்பனைக்கடவுளாய்க் காணக்காண, 
கல்வி மீதான அச்சம் குறைகிறது. 
முன்னை நூல்களைச் செய்யும் போது, 
மனத்துள் ஏற்பட்ட மருட்சி ஏனோ இப்போதில்லை. 
வெளி நின்று காட்டுபவனும் அவனே! 
உள் நின்று காண்பவனும் அவனே! 
வெறும் கருவியாய்ச் செயற்படுவதேயன்றி, 
இங்கு என் வேலை ஏதும் இல்லை. 
முழுமையாய் அன்றேனும், 
ஓரளவு இவ் உண்மை உளத்துள் பதிகிறது. 
அதுவே அச்சம் அகன்றிடக் காரணமாம்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
கல்லைப்பிசைந்து கனியாக்கி வான்கருணை, 
வெள்ளத்தழுத்தி வினைகடிந்த வேதியராய் என், 
உள்ளத்திற்கும் குருநாதர், 
பேராசிரியர் அமரர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்கள், 
அருளால் எனக்கு இட்ட பிச்சை, 
வெள்ளமெனப் பெருகி வேந்தனென என்னை வாழ்விக்கிறது. 
என்ன குறையும் இலோம் என
இதயம் நிரம்பி வாழ்கிறேன், வாழ்த்துகிறேன்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
இறையருளால் அறிஞர் பலர், 
என் வாழ்வுக்கு வழிகாட்டித் துணைசெய்தனர். 
கம்பனே வாழ்வெனக் காட்டிய கம்பனடிப்பொடி, 
அன்பால் ஆதரித்து எனை ஆளாக்கிய அருணகிரியார், 
தமது அங்கீகரிப்பால் அறிவுலகில் எனை நிலைநிறுத்திய 
பேராசிரியர் அ.ச.ஞா., 
கம்பனின் தத்துவ வித்தகத்தை தரிசிக்கச்செய்த கவிக்கோ.
இப்பெரியாரைக் கண்டு பயனெய்தும் வண்ணம், 
என்னை ஆளாக்கி அருள் செய்த, 
என் ஈழத்துக் குருநாதர்கள்,
வித்துவான்  வேலன், வித்துவான் ஆறுமுகம், 
ஆசிரியர் சிவராமலிங்கம்பிள்ளை, தேவன் ஆகியோரோடு, 
ஆழத்தமிழ் கற்பித்து என்னை ஆளாக்கிய, 
பேரறிஞர் இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் என, 
நான் போற்றித் தொழும் அறிஞர் வரிசை மிக நீண்டது. 
என் உச்சியில் அவர்தம் திருவடித் தூசி பெற்றேன்.
நல் மன ஆசி பெற்றேன். 
அதனால் ஆசு தீர்ந்தது. 
தேசு நீண்டது.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
செல்லும் சொல்வல்லான் எனும் எனது இந்நூலில், 
பத்துக்கட்டுரைகள் பதிவாகின்றன. 
எழுத்துரு முழுவதும் எனது. 
பொருளைப் பொறுத்தவரை, 
முன்னோர் மொழி பொருள் சிலவற்றையும், 
பொன்னே போல் போற்றி இதனுள் பொதிந்துள்ளேன். 
அப்பெரியோரால் நான் சிறந்தது உண்மை. 
என்னால் அவர் கருத்து மாசுற்றதோ அறியேன். 
அங்ஙனமாயின் கற்றோர் பொருப்பார்களாக !
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
கன்னியாசுல்கம் எனும் முதற்கட்டுரை. 
நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரின், 
தசரதன் குறையும் கைகேயி நிறையும் எனும், 
நூலைக் கற்றதன் பிரதிபலிப்பு. 
கம்பனைக்கற்று கரைகண்ட பெரியார் அவர். 
ஆயினும் அவர்தம் இந்நூற் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. 
ஆன்ற அப்பெரியாரை மறுக்க நீ யார் ? 
கேள்வி எழும். 
விடைகள் இரண்டுளவாம். 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும், 
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணாது ஒழியின், 
அது குற்றமே என்பது ஒன்று. 
தசரதச்சக்கரவர்த்தியை, 
கம்பனோ, கம்ப காவியத்தில் வரும் பாத்திரங்களோ, 
போற்றினரேயன்றி தூற்றினார் இல்லை. 
தாயொத்து, தவமொத்து, சேயொத்து, மருந்தொத்து, அறிவொத்து, 
தன்னுயிர் போல் மன்னுயிரை நேசித்தவன் தசரதன் என்கிறான் 
கம்பன்.
 
தாயொக்கும் அன்பில், தவமொக்கும் நலம் பயப்பின்  
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால் 
நோயொக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்கு கேள்வி 
ஆயப்புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான். 
மானமும், குலமும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் எனவும், 
நல் அற மூர்த்தி அன்னான் எனவும், 
தருமத்தின் கவசத்தான் எனவும், 
பலவகையாய், கம்பனால் போற்றப்பட்டவன் தசரதன். 
அத்தகையனை கவியின் கருத்துக்கு மாறாகவும், 
காவிய ஓட்டத்திற்கு மாறாகவும் விழச்செய்து, 
அவ்வீழ்ச்சியில் கைகேயியை எழச்செய்யும், 
அப்பெரியார்தம் முயற்சியில் எனக்கு உடன்பாடில்லை.
நெஞ்சம் தூயதசரதனை வஞ்சன் என உரைக்கும், 
அவர்தம் வாதில் கிஞ்சித்தும் நியாயம் இருப்பதாய்ப் படவில்லை. 
தாழ்ந்ததை உயர்த்துதல் தகும். 
உயர்ந்ததைத் தாழ்ந்துதல் தகுமா? 
அப்பெரியார்தம் வாதத்தில், 
புத்தியின் கூர்மையன்றி சத்திய நேர்மை இல்லை. 
ஐயத்தால் தெளிவைத் திரிபாக்க முயன்றிருக்கின்றார்கள். 
மறுக்கத்தோன்றியது, மறுத்திருக்கிறேன்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
தக்க பெரியார்தாமும் சிலவேளை, 
முக்குண வயத்தால் முறை மறந்து ஒழுகுவர் என்பது, 
இரண்டாவது பதில். 
உன் பதில்கள் மட்டும் சரியானவையா ?
மீண்டும் கேள்வி எழும்.
சரிதான் என உறுதி சொல்ல நான் யார் ?
எண்ணியது உரைத்தேன். 
ஏற்பதும் இகழ்வதும் கற்றார்தம் கணிப்பிற்குரியதாம். 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
மதியினில் மறுத்துடைத்தாள்
இஃது இரண்டாவது கட்டுரை. 
மங்கல அடையாளம் நீக்கிய, 
கைகேயியின் செயல் பற்றி விளக்க, 
கம்பன் கையாண்ட உவமையில் ஏற்பட்ட குழப்பம், 
இக் கட்டுரையாய் விரிந்துள்ளது.
விடைகாண விழைந்துள்ளேன். 
என் முடிவினை அறிவுலகம் அங்கீகரிக்குமோ ? அறியேன். 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
மூன்றாவது கட்டுரை, 
பெருந்தடங்கன்
புறம் அகத்தோடு தொடர்புற்றது. 
பெண்களின் பெருத்த கண்களை, 
அவர்தம் கருணை மனத்தோடு ஒன்றுவித்து, 
கம்பன் செய்யும் வர்ணனையை, 
காண்டந்தோறும் தேடிப்பதிவு செய்துள்ளேன். 
இஃது இக்கட்டுரையின் சாராம்சம்.
 
 *-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
சொல் ஒக்கும் 
என்பது நான்காம் கட்டுரை.
சொல்லுக்கும், பொருளுக்கும், உணர்வுக்குமான தொடர்பில், 
சொல்லுக்கும், பொருளுக்குமான இயைபு பற்றிய, 
கம்பனின் கருத்து இக்கட்டுரையில் பதிவாகிறது.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
அறியாமை ஒன்றுமே 
இத்தலைப்பில் இரண்டு கட்டுரைகள் வரைந்துள்ளேன்.
முதற் கட்டுரை, 
கம்பனின் கடவுள் வாழ்த்துப்பாடல்களில் ஒன்றான, 
நாராயணாய நம எனும் பாடலை நயப்போடு காண்பது. 
இதே தலைப்பில் அமைந்துள்ள இரண்டாம் கட்டுரை, 
மேற்பாடலை தத்துவக்கண் கொண்டு நோக்குவது.
கற்றோர் உவப்பின் என் முயற்சி பயன்கொள்ளும்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
செல்லும் சொல்வல்லான் 
நூலின் தலைப்பாய் அமையும் இக்கட்டுரை, 
சொல் வன்மையின் திறம் உரைப்பது, 
சொல் வன்மை நோக்கி, 
இராமனால் அனுமனுக்கும், 
கம்பனால் இராமனுக்கும் வழங்கப்பட்ட, 
இருபட்டங்களை அடிப்படையாய்க் கொண்டு, 
சொல்வன்மை பற்றிய கருத்துக்களை, 
கம்பன் அடி பற்றி ஆய்ந்துள்ளேன்.
இக்கட்டுரையில் வரும், 
அனுமன் பற்றிய பகுதிகள் 
எனது மற்றொரு நூலான மாருதி பேருரைகள் எனும் நூலிலும்,
வேறு விதமாய் விரிக்கப்பட்டுள்ளன.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
வேரோடும் சாய்ப்போம் 
இஃது எட்டாவது கட்டுரை.
கம்பனைக் கண்டித்தவர் புரட்சிக்கவிஞர். 
ஆனாலும், அவர் உள்ளம் கம்பனின்பாற்பட்டது. 
போரிலா உலகம் காணப் புறப்பட்ட கம்பன், 
அதற்காம் உபாயம் உரைக்கின்றான். 
அவ் உபாயம் பற்றியும், 
அதை உள்வாங்கி வழிமொழிந்த, 
புரட்சிக்கவிஞர்தம் கவிதை பற்றியும், 
இக்கட்டுரை விரிந்துரைக்கின்றது. 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
புலவர் இட்ட மாலை  
இஃது ஒரு நயப்புக்கட்டுரை. 
கவிஞனை விட, 
கவிதைகளை இரசிக்கும் உரிமை இரசிகர்க்கே அதிகமாம். 
அவ் இரசனை மரபு இதயத்தை விரிவித்து இதம் தருவது. 
பொருந்தா இடத்தில் புலவர் இட்ட மாலைகள், 
எண்ண விரிவில் பதிவாக்கும் ஏற்றத்தை, 
இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். 
இவ்வெண்ணத்தின் மூலவர் என் குருநாதர்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
நிறைவுக்கட்டுரை, 
வரிசை
உயர்வு, தாழ்வைச் சமன் செய்யும் இன்றைய உலகின் நடைமுறை, 
தமிழர்தம் வாழ்விற்கு ஒவ்வாதது. 
உலகின் உயர்வு நோக்கிய போற்றுதல், 
அவ் உயர்வு நோக்கி உலகோரை உயர்த்தும். 
அது நோக்கி நம் மூத்தோர் அமைத்த வரிசை மரபினையும், 
அம்மரபினைக் கம்பன் கையாண்ட அழகினையும், 
இக்கட்டுரை உரைக்கின்றது. 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
முதன் முதலில் என் எழுத்தாக்கங்களை, 
நூலாய் வெளியிட்டுப் பெருமை செய்தது, 
புதுவைக்கம்பன் கழகமே. 
அக்கழகத்தின் முதல்வர், 
அமரர் கம்பவாணர் அருணகிரி அவர்களின் அன்பினைப் பெற்றது, 
என் முன்னைத் தவப்பயனேயாம். 
அவரின்பின், என்னைப் பிள்ளையாய்ப் பேணி வருபவர், 
புதுவைக்கம்பன் கழகத்தின் இன்றைய செயலர் தி.முருகேசனார் 
அவர்கள்.
என் உயர்வில் என்னை விடப் பெருமை கொள்ளும் பெரு மனிதர் 
அவர்
கம்பன் பணியை, தன் வாழ்நாள் கடைமையாய் ஆற்றும் பெரியார்.
தன் பொருளையும், புகழையும், 
கம்பன் திருவடிகளில் கொட்டி மகிழும் புண்ணியர்.
கனிவும், பணிவும் அவர் கண்ணியத்தின் அடையாளங்கள்.
தாயாய் என்னைத் தாங்குபவர். 
அவர் கருணைக்கு எப்பிறவியில் கைம்மாறு இயற்றுவேன்? 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*- 
 
கம்பனை ஆழக்கற்ற புதுவைக் கழகத் தலைவர் 
கோவிந்தசாமி முதலியார், 
வக்கீல் வழிநின்று கம்பன் தாள்தொழும் தம்பியாய்ச் செயல்படுகின்ற, 
கழகத்தின் உபதலைவர் அன்பர் சிவக்கொழுந்து, 
பொருளால் புகழ் செய்யும் புரவலர் பொருளாளர் வேல்.சொக்கநாதன், 
சிற்றெறும்பையும் பொறாமைப்பட வைக்கும் செயல் வீரர் 
செயலர் கல்யாணசுந்தர முதலியார் என, 
வேரோடி விரிந்து நிற்கும் புதுவைக்கழக விருட்சத்தில், 
என் மற்றொரு நூல் கனிந்து பயன் செய்ய என்ன தவம் செய்தேனோ?
அவர் அனைவர்க்கும் என் அன்பும், பணிவும்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
இந்நூலின் மூலம், 
என் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறுகிறது.
பேராசிரியர் நாவுக்கரசர் சோ.சத்தியசீலன் அவர்கள், 
முன்னுரை எழுதியமை, 
இந்நூற்குக் கிடைத்த மகுடச் சிறப்பு.
என் குருநாதரின் அணுக்கத் தொண்டர் அவர். 
மைந்தராய், மாணவராய், மதியுரை அமைச்சராய் செயலாற்றி, 
எனது ஆசானின் அகத்தமர்ந்த பெரியர் அவர். 
அறிவை அன்பாக்கிய அற்புதர். 
அறிவாணவம் சிறிதுமிலா அதிசயர்.
விநயமே அவர்தம் வித்தையின் வெளிப்பாடு. 
இறங்கி வந்து இளையோரை ஏற்றுகிற மாமனிதர்.
முட்டில்லா அறிவிருந்தும் இளையோரை, 
தட்டி வளர்க்கும் தகவுடையார். 
இன்றைய மேடைப்பேச்சாளர்களின் பிதாமகர்.
எங்கோ இருந்த எனை எல்லோர்க்கும் இனங்காட்டி ஏற்றம் செய்தவர்.
என் குருநாதர் மறைந்த குறையை நீக்குபவர்.
இந்நூல் பற்றிய அப் பெரியார்தம் வார்த்தை ஒவ்வொன்றும், 
தெய்வத்திருவாக்காய் என்னைத் தேற்றுவன. 
என் ஆக்கங்களை விட அவர் தந்த அணிந்துரை, 
இந்நூற்கு ஏற்றம் செய்வது திண்ணம்.
நீளநினைந்திருப்பேன். 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
மாணாக்கர் முன்னுரை தருவது மரபு. 
அம் மரபு பற்றி என் மாணவர்களில் ஒருவனான திரு.ச.மணிமாறன்.
இந்நூற்கு முன்னுரை வரைந்துள்ளான்.
என் விருப்பிற்குரிய மாணவன் அவன்.
மதிநுட்பம் அவனது மாண்பு.
தினம், தினம் புதுமை காண விழைவது, 
அவனது நிறையும், குறையுமாம்.
எத்துறையில் நுழைந்தாலும் முத்திரை பதிக்கவிரும்புபவன். 
ஒன்றில் மனம் பதிக்கும் உறுதி இருந்திருந்தால், 
இவன் மூலம் தமிழுலகு ஒரு பேரறிஞனைப் பெற்றிருக்கும்.
தமிழ் கற்று, பின் விட்டு, 
இன்று கணினித்துறையில் கால் பதித்து, 
அங்கும் தனை அடையாளம் செய்கிறான்.
தன் மதியின் மைல்கல்லாய் எனைப் பதித்தவன்.
மதியோடு விதியும் பொருந்தி கதி தருமாயின், 
இவனால் நான் ஏற்றம் கொள்வேன். 
இவன் ஆற்றலில் என் ஏற்றம் கண்டு அகம் மகிழ்கிறது.
அவனின் முன்னுரை என் நூலை மட்டுமன்றி, 
அவனையும் இனம் காட்டும்.
தீராக் காதலன். 
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
கம்பன் பற்றிய எனது முன்னை மூன்று நூல்களையும், 
வானதி பதிப்பகத்தாரே வெளியிட்டுத் துணைசெய்தனர்.
தமிழ் உலகிற்கு உயர் அறிஞர்தம் நற்கருத்துக்களை,
நூலாக்கித் தந்த பெருமை அவர்தமக்கே பெரிதும் உரியது.
வட்டி போட்டுத் தமிழை வளர்த்த செட்டிநாட்டுச் செம்மல்கள்.
ஐயா திருநாவுக்கரசு அவர்கள் வழிநின்று,
மைந்தர் ராமு அவர்கள், 
இன்றும் அத்திருப்பணியைச் செம்மையுற நிகழ்த்துகிறார்.
வரலாற்றுப் பெருமை கொண்ட வானதியின், 
இரு தலைமுறைத்தொடர்பு என் பேறு.
நன்றியோடு வணங்குகிறேன்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
இந்நூலின் கருத்தாக்கத்தில் துணை செய்த,
என் மாணாக்கர்கள் திரு.ஸ்ரீ.பிரசாந்தன், திரு.ச.மார்க்கண்டு,
திரு.எம்.கலைச்செல்வன், 
செல்வி வாஹினி ஸ்ரீதரன் ஆகியோர்க்கும், 
உருவாக்கத்தில் துணை செய்த,
திருமதி சுதர்சினி கோபிரமணன் 
ஆகியோர்க்கும் நன்றியுரைத்தல் அவசியமன்றாம். 
விழுதுகளாய் எனைத்தாங்கி நிற்கும், 
அந்நல்லார்க்கு நன்றி எதற்கு?
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்.
 
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 
நிறைவாய் என் அன்பு வாசகர்களுக்கு ஒரு வார்த்தை. 
கம்பனால் உங்கள் உறவு கிடைத்தது. 
உங்கள் ஆதரவால் உயர்ந்தேன் நான். 
அந்நன்றி மறவேன் !
நூலில் பதிவானவை எனது சிந்தனைகள்.
அவற்றை அப்படியே ஏற்காமல், 
உங்கள் சிந்தைத் தராசேற்றி, 
தேர்ந்து பயன் கொள்க !
கம்பன் வாழ்க !
 
"இன்பமே எந்நாளும் துன்பமில்லை" 
 
 பொருளடக்கம்: 
01.கன்னியாசுல்கம்;  
02.மதியினில் மறுத்துடைத்தாள்;  
03.பெருந்தடங்கன்;  
04.சொல் ஒக்கும்;  
05.அறியாமை ஒன்றுமே ! - 1; 
06.அறியாமை ஒன்றுமே ! - 2; 
07.செல்லும் சொல்வல்லான்;  
08.வேரோடும் சாய்ப்போம்;  
09.புலவர் இட்ட மாலை;  
10.வரிசை.                                                                                                                  
எழுத்தாளர் பற்றி: இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
More Information
SKU Code VAN B 196
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name இலங்கை ஜெயராஜ் - Ilangai Jeyaraj
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:செல்லும் சொல்வல்லான் - இலங்கை ஜெயராஜ் - Sellum Solvallaan - Ilangai Jeyaraj - Sellum Solvallan

Similar Category Products