முன்னுரை :
நம் நாட்டில் பிறந்த மகான்கள், சித்த புருஷர்கள், யோகிகள், தவசீலர்கள், ஞானிகள் எத்தனையோ எண்ணிறந்தோர் என்று நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். இன்றும் நம்மிடையே அதைப் போன்றோர், அல்லது அவர்களே வாழ்ந்து வந்தாலும் நமது அறிவாலோ புத்தியாலோ அவர்களைக் கண்டு கொள்ள நம்மால் இயலவில்லை.
என்னைப் பொறுத்தவரை எடுத்த இந்த இழிபிறவியை முடித்துக் கரையேற ரமண பகவானையோ, அல்லது ராமகிருஷ்ணரையோ, புத்தரையோ, ஏசுவையோ, நபிகளையோ என்னால் சந்திக்க முடியாது. தவம் செய்யவோ, பூஜைகள் செய்யவோ அல்லது உள்ள எத்தனையோ மார்க்கங்களைக் கையாண்டு கடைத்தேற உடல் வலிமையும் மன வலிமையும் இல்லவே இல்லை. இதை எண்ணி உணர்ந்து கொள்ளவே என் வாழ்நாளில் பாதி நாட்களை வீணாலாய்க் கழித்து விட்டேன். எஞ்சியுள்ள சில நாட்களையாவது இப்போது என் அறிவுக்குப் பெரிய மகான்கள்தான் என்று தோன்றக் கூடியவர்களைத் தரிசிப்பதையே என் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய வழக்கமான செய்கைகளைக் கேட்டுக் கொண்ட யோகி ஸ்வாமிகள், இவ்வளவு இடங்களுக்கும் சென்று பெரியவர்களைச் சந்திப்பது நல்லது. அவர்கள் ஆசி பெறுவது அதிலும் நன்று. ஆனால் ஏதாவது ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு முழுச் சரணம் அடைந்து விட்டால் அதனுடைய பலனே வேறல்லவா. ஏன் அதை நீங்கள் செய்யக் கூடாது என்று என்னைக் கேட்டார். பதில் சொல்ல அவர் முன்னால் எனக்கு வார்த்தை வரவில்லை.
என்னுடைய அகந்தையும் நான் கொண்ட அறிவு என்றும், புத்தி என்றும் எண்ணிக் கொண்டிருக்கிற கற்ற கசடுகள், இத்தனை மகான்களையும் சந்திக்காமல் இருப்பது எனக்குப் பெரிய இழப்பல்லவா? அவர்களைச் சந்திக்க இன்னொரு பிறவியா நான் எடுத்து வருவது? அப்படியே எடுத்து வந்தாலும் நான் அவர்களை இழந்து விட்டால்... இழப்பு அவர்களுக்கா? எனக்கல்லவா. என்று என்னை ஆட்டுவிக்கிறது. இவ்வளவு பெரிய மகான் வழி காட்டியும் என் மனம் அதில் செல்ல மறுக்கிறதெனில் நான் செய்த பாவங்கள் எவ்வளவோ என்று எண்ணம் போகிறது.
இன்னொரு வகையிலும் என் மனம் என்னைத் தேற்றிக் கொள்வதுண்டு. நாம் சென்று தரிசிப்பவர்கள் ஞானியாக இருந்தால் அவர்களின் பார்வை நம் மீது பட்ட மாத்திரத்திலேயே நமது ப்ராரப்தகர்மம் நசித்து விடும் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திலிருந்து என் கர்ம வினைகள் நசிக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இது ஞானிகள் மேல் நான் கூறும் குற்றமல்ல. நான் செய்த முன் வினைகளின் அழுத்தம் எவ்வளவு பலமாக இருந்திருக்கிறது என்பதை என்னை உணர வைக்கிறது.
யோகி ஸ்வாமி அவர்களை நான் சந்தித்தது தற்செயலாக நிகழ்ந்தது. அது இடையில் மறைந்து மீண்டும் மலர்ந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
என்னவெல்லாமோ அவரிடம் கேட்க வேண்டும் என்று சென்ற நேரங்களில் அவர் சந்நிதியில் அதைக் கேட்க எனக்கு வார்த்தைகள் வராது. அப்படியே வந்து நான் கேட்டுவிட்டாலும் அடடா இதைப்போய் அவரிடம் ஏன் கேட்டோம் என்று வருத்தப்படுவேன்.
யோகியாரைப் பற்றி பாலகுமாரன் அவர்கள் நல்ல கவிதைகளை அவரது அனுபவங்கள் என்ற எழுத்தில் வடித்திருக்கிறார். அவரது உணர்வுபூர்வமான அந்த உண்மைகளை மதிக்கிறேன். எழுத்தின் வடிவை ரசிக்கிறேன். இதைப் படிப்பவர்கள் யோகியைச் சந்திக்க திருவண்ணாமலை செல்வது நிச்சயம்.
இந்த நூலுக்கு முன்னுரை வேண்டும் என்று கேட்டார். எனக்கென்ன தெரியும் என்றேன். என் எழுத்தைப் பற்றி ஒன்றும் நீங்கள் சொல்லவேண்டாம், யோகியாரைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும் என்றார்.
சத்தியமாகச் சொல்கிறேன்.
யோகியாரைப் பற்றி என் அறிவுக்கெட்டியவரை நான் எது சொன்னாலும் அது தவறாகவே இருக்கும். என்னுடைய அறிவுக்கும், உணர்வுக்கும் அவர் எட்டிவிட்டால் அவர் இப்படிப்பட்டவர்தான் என்று எழுத வார்த்தைகள் வராது போய்விடலாம்.
அவர் இப்படித்தான் இருக்கிறார் என்று சொல்லும் நிலையில் நான் இருந்தால் நானும் பெரிய யோகியாகத்தான் இருக்க வேண்டும். சாதாரண உலக சுக துக்கங்களில் உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு புழு ஞானியரைப் பற்றிக் கருத்துக் கூறுவதாவது? ஒன்று மட்டும் நிச்சயம்.
அவர் இந்த நிலையில் இருக்கிறார் என்று எனக்குத் திட்டமாகத் தெரிந்ததெனில் நான் அவரிடம் போக வேண்டிய அவசியம் எனக்கில்லை. போகமாட்டேன். அவரைப் பற்றித் தெரியாததனாலேயே அவரின் தரிசனத்தை விரும்புகிறேன். என்னைப் பற்றி சரியாகத் தெரியாத நான் அவரைப் பற்றிக் கூறுவது அபத்தம். அறிவின்மை, முட்டாள்தனம். அந்த அருகதையும் எனக்கில்லை.
இது தவறு எனில் என்னை மன்னிக்க.
இறைவனடி
இளையராஜா
சென்னை-17.
குரு தரிசனம்
அம்மா தன பிள்ளையைத் தண்ணீர் மொண்டு வரும்படி சொன்னாள். அம்மாவுக்கு உதவி செய்வதென்றால் அந்தப் பிள்ளைக்கு பரம சந்தோஷம். அதுவும் கேணியிலிருந்து நீர் இறைக்கும் வேலை வெகு ஆனந்தம்.
வாளியும் கயிறுமாய் கிணற்றடிக்கு அந்தப் பிள்ளை போயிற்று. கிணற்றுச் சுவர் விளிம்பில் ஒரு வால் குருவி. வால் குருவி கூவிக் கொண்டிருந்தது. கூவிக் கொண்டிருந்த குருவியை விநோதமாய் அந்தப் பிள்ளை உற்றுப் பார்த்தது. பிறகு ஏதோ ஒரு வேகம். வால் குருவி நீர் இறைக்க இடைஞ்சல் என்கிற எண்ணம். மனம் தெளிவான கட்டளை இடும் முன்னரே அனிச்சையாய் எந்த நோக்கமும் இல்லாத ஒரு செயல். கையில் இருந்த கயிறை வால் குருவி நோக்கி பிள்ளை வீசியது. வீசிய வினையின் நோக்கம் குருவியை விரட்டுவதுதான். ஆனால் வினையின் முடிவு வேறாய் இருந்தது.
வீசிய கயிற்றின் நுனி குருவியின் மீது பட்டு குருவி துடித்து வீழ்ந்தது. அடி தாங்காமல் வாய் பிளந்தது. பதறியது பிள்ளை. வாரி கையில் எடுத்து நீர் ஊற்றி அடிபட்ட குருவியை ஆசுவாசப்படுத்த முயன்றது. பயனில்லை. குருவி இறந்துவிட்டது. பாடிக் கொண்டிருந்த பறவையைக் கொன்று விட்டோமே என்கிற வேதனையில் பிள்ளைக்கு அழுகை பீறிட்டது. துக்கம் நெஞ்சைத் தாக்கியது. அறியாமல் செய்தது என்றாலும் அளவிடமுடியாத வேதனை வந்தது.
யோகி சுரத்குமார்தான்.
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.