Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

முத்துச் சிப்பி - 1 - Muthu Chippi - 1 - Muthuchippi - Mutu Shippi - Muthu Chippy

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 301
₹125.00

புதினம் / நாவல். 

காகித அட்டை / பேப்பர்பேக்; 

296 பக்கங்கள்; 

மொழி: தமிழ்; 

முதற் பதிப்பு: டிசம்பர், 1978; 

மூன்றாம் பதிப்பு: 2010.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் முத்துச் சிப்பி - 1, அநுத்தமா அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                                                                                           
முகவுரை: 
 
உலகத்துச் சாதனைகள் யாவும் 'ஏன்?' என்ற கேள்வியிலிருந்து பிறந்தவைதாம் மரத்தை விட்டுப் பழம் பிரியும்போது  ஏன் தரையில் விழ வேண்டும்? மேல்நோக்கியோ, பக்கவாட்டிலோ போகாத காரணம் என்ன என்று ஒரு விஞ்ஞானி கேட்ட கேள்விக்குப் பதில்தான் பூமியின் ஈர்ப்புச் சக்தியின் கண்டுபிடிப்பாக அமைந்தது. இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் "ஏன்? ஏன்?" என்று கேட்ட கேள்விதான் - புதுமைகளை அறிய வேண்டுமென்று மனித மனத்தினுள்ளே அரிக்கும் அரிப்புதான் விஞ்ஞான ஆராய்ச்சியாக அமைகிறது.
 
விண்வெளியில் இன்று அரும்பெரும் சாதனைகளை ஆற்றுகிறார்கள். வைத்தியத் துறையில் அற்புதங்கள் நிகழ்கின்றன. இத்தனைக்கும் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சியும் அவாவுமே.
 
சாதனையாளர்களின் வரலாறுகளைப் படிக்கும்போது நமக்குப் பெரிய வியப்பும் பிரமிப்பும் ஏற்படுகின்றன. அவர்கள் பிறக்கும்போதே எழுத்தாணியையோ இயந்திரங்களையோ உடன் பிறப்பாகக் கொண்டு இரட்டையராகப் பிறப்பதில்லை.
 
சாதாரண மனிதப் பிறவி எடுத்து, சாதாரண வாழ்க்கை நடத்தியவர்கள்தாம். தேவை, காலம், சூழ்நிலை - இப்படிப் பல  காரணங்கள் ஒன்று சேரும்போது மனித மனத்தில் மாறுதல்கள் நேருகின்றன. உறங்கிக் கிடந்த அறிய திறமைகள் திடீர் என்று முகிழ்க்கின்றன. சூழ்நிலை இதமாக அமையும்போது, அவை மலர்ந்து அழகு பெற்று நறுமணம் பரப்புகின்றன.
 
ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது, சாதனை புரிந்தவர்களின் திறனைவிட, பின்னணியில் நின்று அவர்களுக்குத் துணைபுரிந்தவர்களே பெரிய சாதனையாளர்கள், தியாகிகளும்கூட என்பது தெரிகிறது. தன்னலத்தை விடுத்து, உலக சுகத்துக்காகத் தம் உயிருக்கு உயிரானவர்களைப் பிரிந்து வாழவும் துணிபவர்களின் துறவு மனப்பான்மைதான் எவ்வளவு மாண்புமிக்கது! எத்தனையோ அருமையான சக்திகள் வெளிச்சம் காணாமல் மடிந்து போனதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள்ள பக்கபலக் குறைவுதான்.
 
முன்பு ஒரு சமயம் மகளிர் சங்கம் ஒன்றில் பெண்களின் கைத்திறன் கண்காட்சி நடத்த உத்தேசித்திருந்தோம். அதற்காகப் பொருள்கள் சேகரிக்கும் பணியில் நான் ஈடுபட்டபோது, மனித இயல்பின் பல கோணங்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.
 
அருமையான, அதிசயமான கைவேலையைச் செய்து வைத்திருந்தவர்கள் அதை வெளிக்காட்டவே பயந்தனர். தாங்கள் செய்திருக்கும் வேலையில் மேம்பாடு இருக்கிறதா, பிறரிடம் காட்டும் அளவுக்கு அதில் நேர்த்தி உண்டா என்பதே புரியாமல் சந்தேக மனத்துடன் வெட்கிக் கூனிக் குறுகினர். வெகு சாதாரணமாய்ப் பலரும் செய்த ஒன்றையே தாமும் செய்து வைத்தனர் சிலர். இவர்கள் தங்கள் வேலையை எங்களுக்குக் காட்டும்போது மிகப் பெருமையுடன் ஒவ்வோர் அம்சமாக எடுத்துரைத்து விவரித்தனர். இதைவிட மேலான வேலை உலகில் இருக்காது என்று நினைத்தவர்கள் அவர்கள். மூன்றாவது வர்க்கத்தினர் சிலர் - தங்கள் கை நேர்த்தியின் தரம் புரிந்தவர்கள். இவர்கள் எங்களுக்கு அதன் மதிப்புப் புரியுமா என்று எங்களையே நாடி பிடித்துப் பார்த்தனர்.
 
இப்படிப் பலதரப்பட்ட உள்ளங்களை அப்பொழுது நான் சந்தித்தேன். விவரம் அறிந்து சகஜமாக நடந்து கொண்டனர் பலர். அவர்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. மற்ற மூன்று இனத்தவர்களும்தாம் என்னைச் சிந்திக்க வைத்தனர்.
 
கூசிக் குறுகிச் சங்கோஜத்துடன் தம் திறமையைத் தாமே கண்டுகொள்ள இயலாமல் தவித்தவர்களைக் கண்டதும்தான் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. "இவ்வளவு கை நேர்த்தியுடையவர்கள் எப்படி அதை அறியாமல் இருக்க முடியும்?" என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். அவர்கள் வீட்டையும், அவர்கள் பழகிய சூழலையும் கவனித்துப் பார்த்தேன். இதற்குக் காரணம் ஒருவிதமாகப் புரிந்தமாதிரி இருந்தது.அரும்பாடுபட்டு கற்றுக்கொண்ட வித்தையை, வித்தையின் விளைவான பொருளைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தனரேயன்றி, தங்களுக்கு விசேஷத் திறமை இருப்பதை அவர்கள் உணரவில்லை. அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட வட்டத்துள் பழகியவர்கள். அந்தக் குறுகிய இடத்தில் இந்த நாசுக்கான வேலைகள் அதிக நடமாட்டமில்லை, அதனால் அவற்றைப் பிறவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பிட வசதியில்லாமல் போயிற்று. அவர்கள் தரத்தை இனம் கண்டு கொண்டவர்களும் அவர்களை உற்சாகமூட்டவில்லை; பாராட்டவில்லை. கலைப் பொக்கிஷமாக இருக்கக்கூடியது வெளிச்சம் காணாமல் பெட்டியில் மங்கியது. சாதாரணத்தையே பெரிதாக மதித்தவர்களும் வெளியுலகம் காணாதவர்கள். அதுபோன்ற வேலைப்பாடுகள் பலவும் மலிந்து கிடந்தன என்பதை அறியாதவர்கள் ஆயின் அவர்களிடம் தன்னம்பிக்கை இருந்தது. மூன்றாமவர் தம் தரத்தை அதிகமாக மதித்து உண்மை புரியாமல் நின்றவர்கள்.
 
முதல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்னை மிகவும் கவர்ந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் கைவேலையின் சிறப்பை எடுத்துக்காட்டி, அதேபோல உள்ள பிறர் வேலைகளையும் ஒப்பிட்டுக் காட்டி, அவர்களுக்குத் துணை நின்று நான் தைரியம் தந்த போது அவர்கள் அகமும் புறமும் விகசித்தனர்.
 
பிறகு சில நாட்கள் கழித்து அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் கைவேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றுப் பலருக்கும் சொல்லித் தந்து கொண்டிருந்தனர்.
 
அதுபோல் பல இடங்களில், பல துறைகளில், பல சந்தர்ப்பங்களில் இவர்களைப் போன்ற மனிதர்களை நான் சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்களைப்பற்றி மீண்டும் சிந்தனை விரிந்தது.
 
அதன் பயனாகத்தான் மாணிக்கம் பிறந்தான். அவன் வளர்ந்த இடத்திற்கும் அவன் ஆசைப்பட்டுப் படித்த படிப்பிற்கும் தொடர்பு இருப்பது சிரமமாக இருந்தது. அவனுக்குத் திறமையிருந்தும் அதை இனங்கண்டு கொள்ளக் கூடிய அறிவு இருந்தும், தன் வீட்டு சூழ்நிலைக்கும் தன் படிப்பிக்கேற்ற வாழ்வுக்கும் தாரதம்மியம் மிகவும் இருப்பதாக எண்ணிக் கூட்டுக்குள் நத்தையாக அவன் புகுந்து கொண்டான். திறமை இருந்தபடியால், அத்துடன் தன்னம்பிக்கையும் தன்னலமும் ஓங்கியிருந்திருக்குமேயெனில், அவன் முன்னேறி ஓரளவு வாழ்க்கையைத் திருப்தியாக அமைத்துக்கொண்டிருக்கலாம். 
 
அவன் தகப்பனார் கந்தசாமி செட்டி சிறந்த வியாபாரி. தம் குறிக்கோளில் கண்ணாக இருந்து, பிடிவாதமாகச் சுயகாரியத்தைச் சாதிக்கக் கூடியவர். மென்மையான உணர்ச்சிகள் அவரை வாட்டியதில்லை. வீடு, வசதி, சாப்பாடு, பூஜை, பணம் சேமிப்பது என்ற ஒரு மட்டத்தோடு அவர் ஆசைகளும் ஆற்றலும் தேங்கிவிட்டன. அதனால் அவர் அமைதியாக வாழ்ந்தார்.
 
மாணிக்கத்தின் தாய் தனபாக்கியம் சிறு பிராயத்தில் வசதியாக வாழ்ந்தவளாயினும், அவ்வயதில் கனவுகள் பல கண்டவளாயினும் மண வாழ்க்கையில் தன்னைப் பூட்டிக்கொண்ட பிறகு, முன்னோர் சென்ற தேய்ந்த பாதையில் தானும் செல்லப் பக்குவமாகி விட்டாள்.
 
பொருள் சேர்ப்பதில் ஆர்வம் இருந்தாலும், தம் நிலைமையை அதிகமாக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைகூடப்படாத ஒரு பேர்வழி கந்தசாமி செட்டி. தந்தையைப்போலக் கனவு காணாமல் இருக்கவும் தெரியாமல், கட்டிய மனக் கொட்டைகள் தகர்ந்து போனாலும் போகட்டும் என்று அமைதியாக ஏற்கும் தாயின் மனப்பக்குவமுமின்றித் தவித்தான் மாணிக்கம்.
 
எந்த நிலையில் இருப்பவரும் அங்கேயே திருப்தியாக இருந்துவிடுவதில்லை. மாளிகையில் இருப்பவன் எளிமையான குடிசை வாழ்வை விரும்புவதும் உண்டு. சாலையோரத்தில் உறங்குபவன் 'டன்லப்' மெத்தையை நினைத்து ஏங்குவதும் உண்டு. இப்படி மாறுபட்ட நிலையில் இருப்பவர்கள், தம் லட்சியத்தைக் காணவேண்டுமென்றால் அதற்குத் துணிவு வேண்டும். விடாப்பிடியாகத் தொடர்ந்து செல்ல மனவலு வேண்டும்.
 
மாணிக்கம் பாசத்தில் பிணைந்தவன். தாட்சிண்யம் நிரம்பியவன். கரடுமுரடான சூழ்நிலையில் தவறிப் பிறந்துவிட்ட அனிச்ச மலர் அவன். தன் உள்ளத்துக் கனவுகளைப் பகிர்ந்துகொள்ள, தக்க தோழமையின்றித் தனக்குள்ளேயே உணர்வுகளைப் புதைத்துவிட்டு, அவை வெடித்து வரும் போது வடிகால் இன்றித் தவித்தான். திறமை இருந்தது; படித்துப் பட்டம் பெற்றான். அவன் அவாவைப் புரிந்துகொண்டு அவனைப் படிக்க வைக்கத் தெரிந்த அவன் தாய்க்கு, தொடர்ந்து அவன் ஆராய்ச்சியைப்பற்றி அறியவோ, அதற்குத் துணை நின்று தூண்டவோ ஆற்றலில்லை.
 
ஆத்மநாதன் அவன் திறமையைக் கண்டார். அவன் தாய் விட்ட இடத்தில் தொடர்ந்து ஓர் ஆராய்ச்சியாளனைத் தயாரித்தார். தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தவும், தம்மால் எட்ட முடியாத இடத்தை அவன் மூலமாக அடைந்து பேரும் புகழும் தேடிக்கொள்ளவும் அவர் எண்ணினார். ஆயின் அவர் பயன்படுத்தும் மைக்ராஸ்கோப், வெப்பமானி, டேப்ரிகார்டரைப் போலவே அவனையும் ஒரு கருவியாக அவர் நினைத்து விட்டார். உலகாயதக் கணக்குப்படி தம்மைவிட மிகத் தாழ்ந்தவன் அவன் என்று நினைத்தார். அவன் வாய்விட்டு பேசத் தைரியமற்று இருப்பது அவன் நிலைமைக்குச் சரியே. ஆண்பிள்ளை இப்படி கோழையாக இருக்கிறானே என்று இகழ்ந்தாரேயன்றி அவனுக்குத் தன்னம்பிக்கை வர ஒரு தோழமை தேவை என்பதும், அன்பும் ஆதரவுமே அவனுடைய மலர்ச்சியைக் கிளர்த்தலாம் என்பதும் அவருக்குத் தோன்றவில்லை.
 
அந்தத் தோழமையை மூவர் கொடுக்க முடிந்தது. பத்மினி, சுந்தரம், நளினி - மூவரும் மாணிக்கத்தின் சங்கோஜத்தை அறிந்து, அவனுடைய நல்ல சுபவாத்தைக் கண்டு அன்போடு பழக முன்வந்தனர்.
 
பிரதிபலனை எதிர்பாராத தூய சிநேகமாக அமைந்துவிட்டது பத்மினி - மாணிக்கம் உறவு. சுந்தரமும் அப்படியே நட்புறவு கொள்ளக் கூடியவன்தான். ஆயின் அவன் நளினிக்காகவே காத்துக்கொண்டிருப்பவன். அவன் மாணிக்கத்தினிடம் கொண்ட மதிப்பும், நளினியின் சுகமே தன் சுகம் என்ற பரந்த மனமும் சேர்ந்து அவனைப் பெரிய தியாகம் செய்ய வைத்து விட்டன. மாணிக்கம் தவிர வேறு யாருக்குமே நளினியின் மனத்தில் இடமில்லை என்று அறிந்த மாத்திரத்தில் விலகிக்கொள்ளும் மாட்சிமை அவனிடம் இருந்தது.
 
சுந்தரத்தின் துறவை நினைக்கும்போது நளினி செய்தது - பெரிதே அல்ல. தான் பிறந்தது முதல் பழக்கமாகிவிட்ட சுகங்களை அவள் ஓரளவு குறைத்துக்கொள்ள
வேண்டியிருந்தது. உடலைப் பொருந்திய சௌகரியக் குறைவுகள்தாம் அவை. உள்ளத்தைப் பொறுத்த மட்டில் அவன் நினைத்த லட்சியம் நிறைவேறி விட்டது. தான் மனப்பூர்வமிக்க நேசிக்கும் மாணிக்கத்தை ஜொலிக்க வைப்பதே அவள் குறிக்கோள். அதற்கு வழி வகுத்துத் தந்துவிட்டான் அவளுடைய அத்தை மகன் சுந்தரம்.
 
மாணிக்கத்தின் சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் யாவருமே அவனைப் போலக் கோழையாக இருக்க வேண்டுமா என்பதற்குப் பதில்தான் அவனுடைய தங்கை அலமேலு. அவள் பிறந்து வளர்ந்த சூழலில் திருப்தியாக ஊரோடு ஒத்து வாழ்ந்தாள். மதனகோபாலன் அவளைப் புறக்கணித்ததும் அவள் இடிந்து விழவில்லை. புதிய நாகரிகப் பழக்கங்களையும் படிப்புகளையும் கற்றதும் அதில் மயங்கி, இதுகாறும் வாழ்ந்த வாழ்வைத் தூற்றவில்லை. ஒருவனை மனத்தால் விரும்பிய பிறகு மற்றவனுடன் வாழ வேண்டாம் என்ற உறுதியுடன், கல்யாணமாகாத பெண் தனியாக வாழ முடியாத ஒரு சமூகத்திலும் தனக்கென்று ஒரு வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முடியும் என்று காட்டியவள் அலமேலு. பணத்தினால் மோகமடையாததும் அல்லாமல், எப்பொழுதும் தந்தை குரலுக்கு அடிபணிந்து வாயடைத்துப் பழகியவளாயினும், கொள்கை என்று வரும்போது அவருக்கு எதிரே திடசித்ததுடன் பேசியவள் அவள்.
 
ஒரே வயிற்றில் பிறந்து, இருவரும் இரு வேறு விதமாக உருவாயினர். மாணிக்கத்திற்குத் தன் தாயின் மென்மையான உணர்வுகளும், தந்தையின் தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தன. அலமேலு தாயின் மனவலுவைப் பெற்றவள், கனவு காணாமல் உலகை உள்ளது உள்ளபடி அறியும் யதார்த்த புத்தியைத் தகப்பனிடமிருந்து கொண்டிருந்தாள்.
 
பணக்காரப் பையன், செல்லமாக வளர்க்கப்பட்டவன், யாரும் எதிர் சொல்லிப் பழக்கமில்லாதவன் மதனகோபாலன். அவனுடைய தாய் தந்தையர் அவன்மீது அன்பைப் பொழிந்தார்களேயன்றி அவர்களுக்கு அவனை அடக்கித் திருத்தி வளர்க்கத் தெரியவில்லை. ஏழைமையின் நடுவில் பணக்காரனாகத் திரிவதில் ஏற்பட்ட அகம்பாவம் வேறு அவனுடைய சுய அறிவையும் மறைத்தது. அவன் தனக்குத் தகாத சிநேகிதத்தில் மாட்டிக் கொண்டு திரிந்தான். அவனுக்கும் ஓர் அதிர்ச்சி தேவையாக இருந்தது. அது அவன் மனசாட்சிக்கு மட்டுமில்லை, மான உணர்ச்சிக்கே சவுக்கடியாக அமைந்தது. அவனுக்குத் தன் தாயிடம் உள்ள அன்பை உணரவும் அந்நிகழ்ச்சி உதவியது. அவன் திருஷ்டி தெளிந்ததும் அலமேலுவின் தரம் அவனுக்குப் புரிந்தது.
 
படிப்பு மட்டும் இருந்தாலோ, பணம் மட்டும் இருந்தாலோ போதாது. சூழ்நிலை எதையும் ஆக்கும் அல்லது அழிக்கும் என்பது என் துணிவு. 
 
இது எம்மட்டும் உண்மை என்பதை வாசகர்களே கூற வல்லவர். 'கலைமக'ளில் தொடர்கதையாக வந்தபோது படித்துப் பாராட்டிய ரசிகர்களுக்கும், இந்த நாவலைப் புத்தக வடிவில் கொண்டு வந்த கலா நிலையத்திற்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
 
காணும் கனவுகளை நனவாக்குவதற்குத் திறமையும் மனத் திண்மையும் அளிக்க அன்னை பராசக்தியைப் பிரார்த்திப்போமாக.  பிரார்த்திப்போமாக. 
 
- அநுத்தமா 
ஸாந்தோம் 
சென்னை- 4
 
 
எழுத்தாளர் பற்றி : அநுத்தமா அல்லது அனுத்தமா (ஏப்ரல் 16, 1922 - டிசம்பர் 3, 2010) ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளர். ராஜேஸ்வரி பத்மநாபன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். 1950களில் 60களிலும் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் படைப்புகளை எழுதியவர். தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென் என்று புகழப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க புதினங்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவை. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
More Information
SKU Code Alnce B 301
Weight in Kg 0.530000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name அநுத்தமா - Anuthama
Publisher Name அல்லயன்ஸ் - The Alliance Company
Write Your Own Review
You're reviewing:முத்துச் சிப்பி - 1 - Muthu Chippi - 1 - Muthuchippi - Mutu Shippi - Muthu Chippy

Similar Category Products





Other Books by அநுத்தமா - Anuthama