உலகம் யாவையும் - இலங்கை ஜெயராஜ் - Ulagam Yaavaiyum - Ilangai Jeyaraj - Ulagum Yavayum -Ulakam Yaavayum
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: Out of stock
SKU:
VAN B 195
₹125.00
இலக்கிய திறனாய்வு நூல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
248 பக்கங்கள்;
முதற் பதிப்பு: மே, 2004;
இரண்டாம் பதிப்பு: ஜூன், 2007;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் உலகம் யாவையும், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
புதுவைக் கம்பன் விழாவில் 14.05.2004 அன்று வெளியிடப்பெற்றது.
என்னுரை:
உள்ளம் உவக்க தமிழ்த்தாயின் திருவடிகளில்
மீண்டும் ஒரு சிறு இலக்கிய மலரினை இட்டு வணங்கும் வாய்ப்பினை,
இறைவன் கொடுத்திருக்கிறான்.
பெரும்புலவர் பலர் வாசமலர் பல இட்டு வணங்கிய திருவடிகளில்,
காகிதப் பூ இட்டுக் களிப்புற முயல்கிறது என் மனம்.
கம்ப கடலினுள் மூழ்கி முத்துக்கள் எடுத்த அறிஞர் வரிசையில்,
வெறும் சிப்பியெடுத்த இச்சிறியவனும் சேர நினைக்கிறான்.
காலம் கடந்து நிலைக்கும் கம்ப காவியக் கலைக்கோயிலில்,
தம் அறிவாற்றலால், மண்டபங்களும் மணிமாடங்களும்
சிற்பங்களும் சித்திரங்களும் செய்து, புகழ்கொண்டோர் பட்டியலில்,
வெறுமனே படிக்கல்லில் பாதம்பதித்த இப்பாமரனுக்கும்,
பெயர்பதிக்கும் பெருவிருப்பு.
காசில் கொற்றத்து இராமன் கதையை,
ஆசைபற்றி அறைவதாய்க் கவிச்சக்கரவர்த்தி கம்பனே பேசியிருக்க,
அவ்வோசை பெற்றுயர் பாற்கடலை, இப்பூசையும் புகுந்து நக்க முயல்கிறது.
இவன் 'பல்லாருள் நாணல் பரிந்து, நல்லோர் வருந்தியும் கேட்பர்' எனுந் துணிவில்,
என் இரண்டாம் இலக்கியப்படையலை கற்றோர் சந்நிதானத்தில்,
அறியாமை உணர்ந்தும்,
ஆசையினால் நாணத்தோடு படைக்கிறேன்.
கடல் தூர்க்க அணில் செய்த சிறுமுயற்சியையும் அங்கீகரித்த இராமனாய்,
கற்றோர் கனிவோடு என் முதுகு தடவுவார்களாக.
*** *** ***
இந்நூலுள்,
என் அறிவெல்லைக்குள் அகப்பட்ட சில சிந்தனைகள் பதிவாகின்றன.
கரைநின்று கம்ப கடலுள் கால் நனைத்தபோது,
என் சிற்றறிவுள் ஏற்பட்ட சில சிந்தனைகளைக் கட்டுரைகளாக்கியிருக்கின்றேன்.
கருத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தமானவை என,
துணிந்து சொல்லமுடியவில்லை.
நம் தமிழ் மரபில்,
இன்றைக்கும், நாளைக்கும் சேர்த்து,
நேற்றே சிந்தித்து வைத்துவிட்ட அறிஞர் தொகை அதிகம்.
அவர்தம் தேடல்களுக்குள்,
என் தேடல் எங்கோ பதிவாகியிருக்கும் என்பது உறுதி.
அங்ஙனமாயின்,
இவ் வீணான முயற்சி எதற்கு ? - கேள்வி பிறக்கும்.
பதில் இருக்கிறது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாய்,
தமிழ்த்தாயின் நிழலில் வாழ்ந்துவரும் என்னாலேயே,
தமிழ்த்தாய் உலாவரும் வீதிகளில் ஒன்றைத்தானும் தாண்டமுடியவில்லை.
அப்படியிருக்க,
பொழுதுபோக்காய்த் தமிழன்னையைப் பூஜிக்க நினைக்கும்,
ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,
அவள் திருவுலாவரும் தெருக்களை அறியத்தானும் முடியுமா?
அவர்தம்மை, அவள் அற்புத உலாக் காண அழைத்து வருவார் யார்?
இக்கேள்வியே,
எனக்குத் தெரிந்தவற்றை உரைத்தல் தவறில்லை எனும் தெளிவைத் தந்தது.
அத்தெளிவு தந்த துணிவே,
இந்நூலாக்கத்தின் காரணம்.
ஒன்றைத் தெளிவுபட உரைக்க விரும்புகிறேன்.
கம்ப கடலை, முழுவதும் தெரிந்து உரைக்கவில்லை.
கம்ப கடலுள், தெரிந்தவை முழுவதும் உரைக்கிறேன்.
இது வாலால் கடலளக்க முயலும் நரியின் முயற்சி.
கற்றோர் கனிந்து பொறுப்பார்களாக.
மற்றோர் துணிந்து நிறுப்பார்களாக.
*** *** ***
கடலாய்ப் பெருகிநிற்கும் கல்விச் சொத்தினைப் பெற்றிருந்தும்,
மாற்றார் அறிவுநோக்கி மண்டியிட்டு நிற்கிறது நம் இனம்.
காலத்தின் கோலமிது.
அறிவுச் சோம்பல் காரணமாக,
ஆழத் தமிழ்க்கடலுள் கால் வைக்காமல்,
நேற்றுப்பிறந்த நிழல் இலக்கியங்கள் நோக்கிப் புதிய தலைமுறையை,
ஆற்றுப்படுத்தும் அறிஞர்(!) கூட்டம் அதிகரித்து விட்டது.
மூழ்கி முத்தெடுக்கத் தெரியாத தம் தகுதிக் குறைவை மறைக்க,
ஆழக் கடலுள் அனைத்தும் உவர்ப்பே என்றுரைத்து,
இளையோர்க்கு,
பிழையாய் வழிகாட்டும் பேர் அறிஞர் பலர் தோன்றிவிட்டதால்,
தமிழன்னை தரம் சிதைந்து தனித்து நிற்கின்றாள்.
அவளைக் காக்கும் வழியென்ன?
கயவர்தம் புன்மை, போக்கும் வழியென்ன?
கற்றோர் கலங்கி நிற்கின்றனர்.
கம்பன் சுவையைக் காட்டிவிட்டால்,
மாற்றார் திசைநோக்காது மாண்புறும் நம் இளைய தலைமுறை,
கம்ப காவியம் வெறும் கதையே என நினைக்கும் இளையோர்க்கு,
அது கதையல்ல வாழ்வென உணர்த்துவது நம் கடமையென்றோ !
இந்நூல் மூலம்,
அக்கடமையைச் செய்ய என்னால் முடிந்தளவு முயன்றிருக்கிறேன்.
*** *** ***
கம்ப காவியம்பற்றி வெளிவந்த நூல்கள் இருவகைய.
ஆய்வாய் அமைந்தவை சில.
இரசனையாய் அமைந்தவை சில.
ஆய்வு நூல்கள் பெரும்பாலும் கம்பனைக் கணிக்க முயன்றன.
இரசனை நூல்கள், கம்பன் கற்பனைகள் விண்தொட்டு இருப்பதை விளம்பின.
இவ்விருவகை நூல்களும்,
போர் நிறைந்த இவ்வுலகில் புகுந்து நின்று,
அன்றாடம் அல்லலுறும் மனிதரை மறந்ததால்,
மண்தொட்டு நின்ற மனிதர்களின் மனந்தொட்டு உயரும் வாய்ப்பிழந்தன.
கற்பனை ஆய்வதும், கவிதையை ஆய்வதும்,
இன்றைய மானுட வாழ்வினை ஏதேனும் வகையில் உயர்த்துதல் அவசியம்.
இச்செய்தியை உணர்ந்து உரைத்த,
பேரறிஞர் சிலரைத் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.
என் குருநாதர் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்,
என்னைப் பிள்ளையாய்ப் போற்றிய பெருந்தகை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்,
மாக்சீயத் தத்துவத்தை இம்மண்ணுக்கு உரமாக்கிய
பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் என,
இவ்வறிஞர் வரிசை நீளும்,
என் முன்னைத் தவப்பயனால் அவர்தம்மைக் காணவும், கற்கவும் பேறுபெற்றேன்.
அவர் கைபிடித்து இம்மழலை தவழ முயலும் முயற்சியே இந்நூல்.
*** *** ***
தத்துவக் கண்திறந்து என்னை உய்வித்த,
வித்தகர், பேராசான் நமசிவாயதேசிகர்
என்னுள் அறிவுக்கதவுகள் பலதிறப்பித்து என்னை ஆட்கொண்டார்.
அவர்திறந்த கதவின் வழியே கம்பனைக் காணும் முயற்சியே,
"உலகம் யாவையும்" எனும் என் முதற்கட்டுரை'
*** *** ***
நல்லன், தீயன் என வரையறை செய்ய முடியாது.
கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரம் கைகேயி.
அவளின் தூய இயல்பினை இனங்காட்டி,
என் 'அழியா அழகு' எனும் முதல் நூலில்,
'சிறந்த தீயாள்' எனும் தலைப்பில் கட்டுரை வரைந்தேன்.
இந்நூலில் அவளின் தீய இயல்புகளை இனங்காட்டி,
அதே தலைப்பில் வேறொரு கட்டுரை வரைந்துள்ளேன்.
தெய்வக் கற்பினள் எனக் கம்பனால் பேசப்பட்ட கைகேயியை,
தீயள் என உரைத்தல் தகுமா? கேள்வி எழும்.
கைகேயியைத் தூயளாயும், தீயளாயும் காண கம்பனே வழிசெய்தான்.
எனவே, இது கம்பனை மீறிய முயற்சியன்றாம்.
ஒரு பாத்திரத்துள் புகுந்து தீ இயல்பு தேடலிற் பயன் யாது ?
மீண்டும் கேள்வி பிறக்கும்.
கட்டுரையுள் பதில் உரைத்திருக்கிறேன்.
கண்டு மகிழ்க.
*** *** ***
ஒருமுறை யாழ்ப்பாணக் கம்பன் விழாவில்,
'அகலிகை', பட்டிமண்டபப் பொருளானாள்.
அப்பட்டிமண்டபம்,
அகலிகை நெறி தவறியவளா ? தவறாதவளா ? எனும் ஐயத்தை எழுப்பிற்று.
இரண்டுக்குமே கம்பன் அடிகளைப் பேச்சாளர் சான்றாக்கினர்.
மாறுபட்ட கம்பனின் கருத்துக்களால் சபை மயங்கிற்று.
நானும் மயங்கினேன்.
அகலிகைபற்றி விழுந்த ஐய முடிச்சினை,
கட்டவிழ்க்க முடியாது கலங்கிய எமக்கு,
முட்டவிழ்த்து முடிவு காட்டினார் வித்தகர்.
அம்முடிவினை,
'நெஞ்சினால் பிழைப்பிலாள்' எனும் கட்டுரையாக்கியிருக்கிறேன்.
*** *** ***
வாலிவதையைப் போலவே,
சீதை தீக்குளிப்பும்,
இராமனின் உயர்வினை ஐயுற வைக்கிறது.
காசில் கொற்றத்து இராமன் எனப் பேசிய கம்பன்,
இராமனின் கொற்றத்தினைக் குற்றமாய் மயக்கும் இடங்கள் இவை.
இராமன் பற்றிய கம்பனின் முன்னைக் கருத்தினை உள்வாங்காது,
காட்சியை மட்டும் கண்டு கருத்துரைப்போர்,
இச்சம்பவங்கள் கொண்டு இராமனை இழித்துரைக்கின்றனர்.
தம் தாழ்நிலைக்கு இராமனையும் அழைப்பதில் அவர்தமக்குத் தனிவிருப்பு.
இளையோர் உண்மையுணர காட்சிப்பிரமானம் தவிர்த்து,
அனுமானப் பிரமாணம் கொண்டு,
இவ்விரு சம்பவங்களும் ஆராயப்படவேண்டியது அவசியம்.
என் முதல்நூலில் வாலிவதையை ஆராய்ந்தேன்.
இந்நூலில் சீதைத் தீக்குளிப்பு ஆராயப்படுகிறது.
'நெருப்பைச்சுட்ட நெருப்பு' எனுந் தலைப்பிலான கட்டுரை,
இக்கருத்தேற்று நிற்கிறது.
*** *** ***
இராவணனின் மனைவியாய் முக்கியத்துவம் பெறினும்,
நான்கே இடங்களில் தோன்றி மறையும் சிறுபாத்திரமாய் அமைபவள் மண்டோதரி.
தோன்றும் இடங்கள் சிலவாயினும்,
அப்பாத்திரத்துள், கம்பன் கைவண்ணம் பலப்பலவாய் விரிகின்றது.
கம்பன் தரும் குறிப்புக்கள் கொண்டு, மண்டோதரியின் மானுடத்தன்மையை ஆராயும் முயற்சியே,
'மயன் மகள்' என்னும் கட்டுரை.
*** *** ***
கம்ப சூத்திரம்,
சிறு சொற்களுள்பெரும் பொருளை உள்ளடக்கி ஆச்சரியம் தருவது.
எல்லையொன்றின்மை எனும் பொருளதனை
கம்பன் குறிகளால் காட்டும் முயற்சி கருதி,
பாரதி ஆச்சரியப்படுவான்.
அவ்வாச்சரியத்தை என் குருநாதர் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்,
கம்பன் கவியொன்றின் இரு சொற்களில் காட்டி மகிழ்வித்தார்.
அவர் தந்த கருத்தினை இசைமேதை மதுரை டி.என்.சேஷகோபாலன்,
ஒருமுறை உரையாடலின்போது உயர்வித்தார்.
அவர்தம் கருத்துக்களை உள்வாங்கி,
என் கருத்துக்களையும் இணைத்து கட்டுரையாக்கினேன்.
அங்ஙனம், கம்ப
சூத்திரமாய் ஒரு பாடலுள் அமைந்த இரு சொர்களுள்,
கம்பன் அமைத்த பெரும் பொருளினை,
வெளிக்கொணர முயலும் முயற்சியாய் அமைந்ததே,
'முன்பு பின்பு' எனும் கட்டுரையாம்.
*** *** ***
யாழ்ப்பாணம் கணேசயரின் தலை மாணாக்கர்,
இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் அவர்களிடம்,
திருக்குறள் முழுவதனையும் பாடம் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.
குறலின் அரையடிக்கு அரைநாள் உரைசெய்து ஆச்சரியப்படுத்தினார்.
மூப்பெய்திய அப்பெரியார், தமிழில் என்னைப் பூப்பெய்த வைத்தார்.
வள்ளுவத்தின் விரிவன்றி, அறத்தின் விரிவும் அவரால் எனக்குணர்த்தப்பட்டது.
சொல், பொருள் கடந்து குரளையுணர்ந்தேன்.
அறியமுடியா அறத்தின் விரிவு ஆசானால் எனக்குணர்த்தப்பட்டது.
வள்ளுவத்தினூடு நான் கண்ட அறவிரிவினை,
கம்பனும் கையாண்டிருந்ததை பின் கண்டேன், களிகொண்டேன்.
அக் களிப்பே 'ஈறில் நல்லறம்' எனும் கட்டுரையாம்.
*** *** ***
'முத்தமிழும் கற்றால்தான் தமிழின் முழுமையறியலாம்.'
இது தமிழ்ச்சுவைகாட்டி, இளமையில் என்னை நெறிப்படுத்திய ஆசான்,
வித்வான் க.ந.வேலன் அவர்களது அறிவுரை.
அவர் ஆலோசனைப்படி முத்தமிழும் கற்க முயன்றேன்.
என் முயற்சி ஓரளவே கைகூடிற்று.
முத்தமிழ்த்துறை முறைபோகிய உத்தமர்க்கு,
கம்பன் உரைத்த அவையடக்கம்,
என் ஆசான் கூற்றை நிஜப்படுத்திற்று.
முத்தமிழ் பற்றிய என் சிறு அறிவோடு உட்புக,
கம்பனின் முத்தமிழ்த்துறை வித்தகம் விளங்கிற்று.
முத்தமிழுக்குமான வரையறையை,
முடிந்தவரை கம்பனுள் தேடிப்பதிவு செய்ததே,
''முத்தமிழ்க் கம்பன்' எனும் கட்டுரை.
இக்கட்டுரையில் நான் காட்டியிருக்கும் பல நயங்கள்,
வை.மு.கோபாலாகிருஷ்ணமாச்சாரியார் உரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
இயல் இசைக்கும், பருந்து நிழலுக்குமான பொருத்தப்பாடுகள்,
என்னால் உரைக்கப்பட்டவை.
*** *** ***
இயற்கை அழியாத் தன்மை கொண்டது.
இயற்கையோடு பொருந்தியதால் தமிழ்த்தாயும் அழியாத் தன்மை கொண்டனள்.
இவ்விரண்டோடும் பொருந்தியதால் கம்ப காவியமும் நிலைத்த பேறு கொண்டது.
இயற்கையோடு தமிழ் முழுக்க முழுக்கப் பொருந்துநிற்குமாற்றை,
தன் இலக்கணப் புலமையால் இலக்கண வித்தகர் பலதரம் எடுத்துக்காட்டினார்.
அவர் கருத்தேற்று என் சிற்றறிவு கொண்டும் சில சிந்தித்தேன்.
தனித்து மொழிவடிவ அடிப்படையில்கூட,
தமிழ், இயற்கையோடு பொருந்திநிற்கிறது.
இயற்கையோடு பொருந்திய தமிழோடு கம்ப காவியமும் பொருந்திநிற்கிறது.
அத்தொடர்பினை எடுத்துக்காட்டுவதே,
'இயற்கை - தமிழ் - கம்பன்' எனும் இக்கட்டுரை.
இக்கட்டுரையில் என் ஊகங்கள் பலவற்றையும் எடுத்துரைத்துள்ளேன்.
அக்கருத்துக்கள் என்னால் முழுமையாய் நிரூபிக்கப்பட்டன அல்ல.
அந்த அளவுக்கு என் இலக்கண அறிவு பூரணப்படவில்லை.
இலக்கண அறிவில் முழுமை கொண்ட இளைஞர்கள்,
என் கருத்துக்களை எடுகோள்களாய்க் கொண்டு ஆய்வியற்றி,
தமிழின் தரமுயர்த்தலாம்.
இலக்கணத் தத்துவ தொடர்புபற்றி ஆழ ஆராய்ந்தால்,
உலகம் வியக்கும் பல செய்திகள் வெளிவரும் என்பது,
என் திண்ணமான எண்ணம்.
*** *** ***
தமிழ்மேல் தான்கொண்ட பெருங்காதலால்,
கடல்கடந்து வாழ்ந்த இச்சிறியேனையும்,
கண்ணின் கருமணியாய்க் கருதிக் காத்த,
பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்,
என்மேற் கொண்ட அன்பு அளப்பரியது.
தன் பிள்ளையயாய் நினைந்து, என்னைப் பேணிய பெரியவர்.
என் ஆற்றலில், என்னைவிட அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தவர்.
அண்மையில் அவர் தெய்வமானார்.
'அழியா அழகு' என்னும் என் முன்னை நூலுக்கு முன்னுரை தந்து,
என்னை உயர்வித்த எம்பிரான் அவர.
இன்று அவரில்லை.
ஆனாலும், அவர் ஆசி இந்நூலிலும் பதிவாக என்னுள்ளம் விரும்பியது.
'பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள்' எனும் எனது சமூக நூல் கண்டு,
அன்புமிகுதியால் அத்தெய்வம் எழுதிய மடலினை,
'தியவத்திருமுகம்' எனும் தலைப்பிட்டு
இந்நூலில் இணைத்து ஆசிபெறுகிறேன்.
*** *** ***
குலச்சொத்தாய் தமிழினைப் பெற்றவர்.
தகுதிமிகு பேரறிஞர் திரு.ஔவை நடராஜன் அவர்கள்.
மரபும், நவீனமும் கற்றுணர்ந்த மாண்பாளர்.
பன்மொழிப் புலவர்.
துணைவேந்தராய்ப் பணியாற்றிய தூயர்.
இளையோரை ஏற்றம் செய்யும் ஏந்தல்.
அவர் தமிழ்மேற் கொண்ட அன்பு என்மேலதாக,
பல பணிகளுக்கிடையிலும் வாழ்த்துரை வழங்கினார்.
அது என் பேறு.
நன்றியுடையேன்.
*** *** ***
இக்கட்டுரைக்கு முன்னுரை தந்திருப்பவர்,
என் அன்பிற்குரிய இளைஞர் த.சிவசங்கர் அவர்கள்.
அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இன்றைய தலைவர் அவர்.
சிறந்த சிந்தனைக் கவிஞர்,
கணினித்துறை நிபுணர்.
கம்பன் பணியில் மூத்த மைந்தனாய் நின்று,
எனக்குப் பலம் சேர்ப்பவர்.
சுமைதாங்காது என் தலைசாயும் போதெல்லாம்,
தோள்கொடுத்துத் துணைசெய்பவர்.
என் ஆளுமையின் விம்பத்தை அவரில் கண்டு மகிழ்வேன்.
முன்னுரையில் அவர் முகிழ்த்த வார்த்தைகள்,
அன்பில் விளைந்தவை.
அவர் எழுந்து என் தகுதியை ஆகாயமளவு விரிக்கிறது.
அவ் விரிவில்,
அறிஞர்கள் என் அறிவின் தகுதியை அன்றி,
அவர் அன்பின் தகுதியைக் காண்பார்களாக.
*** *** ***
எனது முதற் கம்பநூலை வெளியிட்ட,
வானதி பதிப்பகத்தாரே இந்நூலையும் வெளியிடுகின்றனர்.
தமிழ் இலக்கிய உலகில் வானதிக்குத் தனி இடம் உண்டு.
உயர்ந்தோரை ஊக்குவித்து,
பல அறிவுச்சொத்துக்களை அவனிக்களித்த பெருமை,
இவர்தம் தனிப்பெருமை.
ஒரு காலத்தில், வானதியின் நூலொன்றைக் கையில் வைத்திருப்பதையே,
பெருமையாய் கருதிய எனக்கு,
எனது இரண்டாவது நூலினையும்,
வானதியினூடு வெளியிடும் பேறு கிடைத்திருக்கிறது.
எல்லையற்ற மகிழ்வு கொள்கிறேன்.
*** *** ***
கம்பவாணர் காலந்தொட்டு,
புதுவைக் கம்பன் கழகம்,
தாயாய் என்னைப் போற்றி வளர்க்கிறது.
கம்பவாணரைத் தொடர்ந்து செயலராய்ப் பொறுப்பேற்ற,
'கம்பகாவலர்' தி.முருகேசன் அவர்கள்,
கம்பன் கழகத்தினூடாக ஈழ -இந்திய கலாசாரப் பாலம் அமைத்து,
பெரும் பணியாற்றி வருகிறார்.
எங்கள் அகில இலங்கைக் கம்பன்கழகத்தின் காப்பாளராய்ச் செயற்பட்டு,
ஈழத்திலும், ஈழத்தமிழர் பரவி வாழும் புலம்பெயர் நாடுகளிலும்,
தானே நேர்வந்து கம்பன் பணிகளை ஊக்கப்படுத்தி வருகிறார்.
தலைவர் கோவிந்தசாமி முதலியார்,
இணைச்செயலர் கல்யாணசுந்தரர்முதலியார் உள்ளிட்ட
புதுவைக் கம்பன் கழகத்தார்,
தம் எல்லையற்ற அன்பினால் எம்மை இறுகப்பற்றி,
எங்கள் இலங்கைக் கம்பன்கழகத்தின்,
இரத்த உறவாய் ஆகிநிற்கின்றனர்.
கம்பன் பணியை,
தம் தலைப்பணியாய் ஆற்றிவரும் புதுவைக் கம்பன்கழகத்தாரே,
என் இரண்டாவது நூலினையும் வெளியிடுவது என் பேரு.
புதுவைக் கம்பன்கழகத்திற்கு என்ன கைம்மாறு ஆற்றுவேன் ?
'தாயே ஆகி வளர்த்தனை போற்றி' என வணங்குகிறது என் மனம்.
*** *** ***
இந்நூலாக்கத்தில் பலர் துணை செய்தனர்.
பிள்ளையாய் நின்று என்னைப் பேணும்,
என் மாணாக்கன் பிரசாந்தன்
இவ்வாக்கத்தில் பெரும்பணியாற்றினான்.
என் அன்பிற்குரிய கவிஞர் கல்வயல் குமாரசாமி,
என் அன்பு நண்பன் யாழ்ப்பாணம் மார்க்கண்டு,
என் திருக்குறள் மாணாக்கர் திருமதி.மகானந்தன் ஆகியோர்,
இந்நூலாக்கத்தில் ஒப்புநோக்கி உதவி புரிந்தனர்.
கழகப் பணியாளராய் அன்றி,
என் மாணவியாய் அக்கறையோடு செயலாற்றி, நூலினை வடிவமைத்தவர்,
செல்வி.பிரான்சிஸ்கா டொறின் டானியல் அவர்கள்,
இவர் அனைவர்க்கும் என் அன்பும், நன்றியும்.
*** *** ***
துள்ளித் திரியும் நாளில் துடுக்கடக்கி,
அள்ளித் தமிழின்பம் அருந்த வைத்து,
அன்னமும் அருந்தமிழும் ஒன்றாயிட்டு,
அகமும் புறமுமாய் எனை வளர்த்தெடுத்து,
அருகிருந்து வழிகாட்டி நெறிசெய்து,
அண்மையில் அமரராகிவிட்ட என் ஆசான்,
வித்வான் க.ந.வேலன் அவர்தம் திருவடிக்கு,
இந்நூலினை சமர்ப்பித்து மகிழ்கின்றேன்.
*** *** ***
'இன்பமே எந்நாளும் துன்பமில்லை.'
இலங்கை ஜெயராஜ்.
19.04.2004.
இலங்கை.
*** *** ***
பொருளடக்கம்:
1.உலகம் யாவையும்
2.சிறந்த தீயாள்
3.நெஞ்சினால் பிழைப்பிலாள்
4.நெருப்பைச்சுட்ட நெருப்பு
5.மயன் மகள்
6.முன்பு பின்பு
7.ஈறில் நல்லறம்
8.முத்தமிழ்க் கம்பன்
9.இயற்கை - தமிழ் - கம்பன்.
*** *** ***
எழுத்தாளர் பற்றி: இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
SKU Code | VAN B 195 |
---|---|
Weight in Kg | 0.590000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | இலங்கை ஜெயராஜ் - Ilangai Jeyaraj |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%