ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
உடையார் ஐந்தாம் பாகம் பாலகுமாரன் அவர்களால் தொடராக முதலில் எழுதப்பட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
புத்தக விமர்சனம்:
யோகி ராம்சுரத்குமார்
அன்புள்ள பாலகுமாரா!
என்றேனும் இன்னும் ஒரு முறை தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசிக்க நேர்ந்தால் என் மனமும் மூளையும் பிரகதீஸ்வரரைப் பார்க்குமா? சந்தேகமே. உடையாரைப் படித்தபின் பார்வை கட்டாயம் வேறாகிவிடும். இந்த இடத்தில்தான் பெருந்தச்சர் காப்புக் கட்டிக்கொண்டு பிரக்ஞை செய்திருப்பாரோ? இங்குதான் முதன்முறை மண் தோண்டப்பட்டு இருக்குமோ? இதற்கடியில் இராஜராஜன் பட்ட மகிஷியும் மற்ற மனைவியரும், தங்க வளையல்களையும், சங்கிலிகளையும் இதர நகைகளையும் அஸ்திவாரக் குழியில் போட்டிருப்பார்களோ? இந்தப் பிள்ளையார் அருகில் தான் யானை முதற்பலியாக இறந்து விழுந்திருக்குமோ? இங்கேதான் தோண்டிய மண்ணைக் கொட்டி இருப்பார்களோ? இங்கேதான் பாண்டிய வீரன் மதுகொடுக்கப்பட்டு பிதற்றியிருப்பானோ? என்றுதான் யோசிக்கத் தோன்றும்.
இரண்டாம் தளத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால், சீராளனும் ஊமையாளும் அருகே வந்து நிற்பார்கள். திரிபுராந்தகரையும், அவருக்கு உதவி செய்யும் பார்வதி சுப்ரமண்யர் பிள்ளையாரையும் வேறு கோணத்தில், நீ பார்த்த கோணத்தில் பார்க்கத் தோன்றும், கோபுரத்தை அண்ணாந்து பார்க்கையில், நீலநிற வானத்தின் கீழ் பொன் தகடுகள் போர்த்திய பெரிய கோபுரம் ஒருநாளில் ஜொலித்திருக்கும் எனக் கற்பனை செய்யத் தோன்றும்.
பெரிய கோயில் ஒரு பிரம்மாண்டம் என்றால், அந்தக் கட்டிடப்பணி அதைவிடப் பிரம்மாண்டம். அந்தக் கட்டிடப் பணியினைக் கற்பனை செய்து, (ஓரளவே ஆதாரங்கள் கிடைப்பினும்) புஸ்தகமாக்கியிருப்பது இன்னொரு பிரம்மாண்டம். படிப்பவர்க்கு மலைப்பை உண்டு பண்ணுவது. உடையார் ஸ்ரீராஜராஜத்தேவர் மட்டுமல்ல; பாலகுமாரனும்தான்.
அனேகமாய் எல்லாப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் ரணகளம்தான். தேசத் தந்தை மகாத்மாகாந்தி, தந்தை என்ற பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினாரா, இல்லையா? என்று பட்டிமன்றம் போட்டுக் காந்தியைப் பரிகசிக்கிறார்கள். பெண் விடுதலை பாடிய பாரதி பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்றவில்லை என அங்கலாய்க்கிறார்கள். பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்றி இருந்தால் அவர் வெறும் சுப்பையா. தேசியகவி சுப்ரமண்ய பாரதி ஆகி இருக்கமுடியாது.
நாலு பிள்ளைகளுக்கும் வசதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அவர் வெறும் மோகன்தாஸ் காந்தி, மகாத்மா காந்தி இல்லை. அம்மங்கையைப் பற்றி நினைத்து அவளுக்காக வாழ்க்கையைச் செலவிட்டிருந்தால், குந்தவையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால் என்றோ ராஜராஜன் மக்கள் மனத்திலிருந்து இறங்கியிருப்பான். இன்றளவும் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
இது அருள்மொழி என்ற தனிமனிதனின் கதை அல்ல; ஒரு சமுதாய அலசல். அந்தணர்கள், கல்தச்சர்கள், மறவர்கள், தேவரடியார்கள் என்று பிரிந்திருந்த தமிழ்ச் சமுதாயத்தின் வக்கரிப்புகளுக்கிடையே, கொக்கரிப்புகளுக்கிடையே இழிபடாமல் அத்தனை பேரையும், அணைக்க வேண்டிய இடத்தில அணைத்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து அனைவர்க்கும் மேலாய் உயர்ந்து நின்று உயர்ந்த கோயிலைக் கட்டமுடிந்தது என்றால் அது அந்த மஹாமனிதனின் மஹாகெட்டிக்காரத்தனம்.
சோழர் காலத்தில் ஒற்றர் படை மிக அதிகம் எனப் படித்திருக்கிறேன். அந்த வலை படர்ந்து விரிந்து கிடந்ததை ஒற்றனுக்கு ஒற்றன் அவனுக்கு இன்னொரு ஒற்றன் என்று எக்கச்சக்கமாய் ஒற்றர்கள் இருந்ததைக் காட்டியிருக்கிறார்கள். கற்பனைப் பாத்திரமென்றாலும் வைஷ்ணவதாஸன் கண்கலங்கச் செய்துவிட்டார். அவர் மனைவியை என்ன செய்யப் போகிறாய்? அவளுக்கு நற்கதிகாட்டுவாய் என நினைக்கிறேன்.
சோழர்களின் மிகக் கொடுமையான போர் முறை பற்றி பல சரித்திர நூல்கள் கூறுகின்றன. அதற்கு இக்கதையில் சரியான காரணம் காண்பித்திருக்கிறாய்.
கோயில் கட்டுதல் ஒரு மகா பெரிய விஷயம் என்றால் மேலைச் சாளுக்கிய போர் இன்னொரு மகா பெரிய விஷயம். அதற்கு எத்தனை எத்தனை ஏற்பாடுகள். Picturesque description என்று சொல்வார்கள் போர்ப்படை கம்பீரமாய் கண்முன்னே அணிவகுத்துச் செல்வதைக் காணமுடிகிறது.
உனக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். தீர்த்த யாத்திரை என்ற தலைப்பில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று பற்றிய இசை நாடகத்தை எங்கள் பள்ளியில் அரங்கேற்றியபோது நீ தலைமைதாங்க வந்திருந்தாய். இந்தச் சிறிய அரை மணி நேர விஷயத்திற்கு நான் ஒரு மாதம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த அல்ப விஷயத்திற்கே இப்படி என்றால் நெடுந்தூரப் பயணத்திற்கு எத்தனை எத்தனை ஆயத்தங்கள் எத்தனை பாடுகள் உணவு, உடை, உளவுப் பிரிவு, வைத்தியம் இத்யாதி இத்யாதி. சிவகைங்கர்யம் என்ற உயரிய லட்சியமும் சில நல்லவர்களின் வல்லவர்களின் ஒத்துழைப்பும் அவனை வெற்றி பெற வைத்தன.
நெடுநாட்களாய் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்கும் விஷயம். சுவைமிகுந்த நமது சரித்திரம் facts of figure ஆகப் பாடப் புத்தகங்களில் வறண்டு கிடப்பதேன்? பாவம் நம் குழந்தைகள் விஷயங்களை மனப்பாடம் செய்து கக்குகின்றன.
ராஜராஜன் கோயில் கட்டியதைவிட என்னை பிரமிக்கச் செய்த விஷயம் அவன் அதைக் கட்டிக் காக்கச் செய்த ஏற்பாடுகள்தான். அது குறித்த கல்வெட்டைப் படிக்க மீண்டும் ஒருமுறை உன்னுடன் தஞ்சை பெரிய கோயில் போக வேண்டும்.
தஞ்சை பெரிய கோயிலை தரிசிக்க அதை தரிசிப்பதன் மூலம் ராஜராஜனைத் தரிசிக்க நம் குடும்பம் முழுவதும் கௌரி, கணேஷ், ஆகாஷ், கமலா, கிருஷ்ணா, சாந்தா, சூர்யா, நீ, நான், லலிதா அனைவரும் தஞ்சை போனால் என்ன? நம் குடும்பம் மட்டுமல்ல; தமிழ்க்குடும்பம் ஒவ்வொன்றும் உடையார் நாவல் படித்ததும் தஞ்சை போகும் ராஜராஜனைத் தரிசிக்கும். சோழம்! சோழம்! சோழம்!
இப்படிக்கு
என்றும் அன்புடன்,
ரவி
(சிந்தா ரவி)
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.